ரயில் - முன்பதிவு
இந்தியாவிலிருக்கும் போக்குவரத்து வசதிகளில் எல்லாதர மக்களும் நம்பியிருக்கும் ரயில் போக்குவரத்து, இந்திய நாட்டின் அதிக மக்கள் பயணம் செய்யும் போக்குவரத்தாகவும் இருந்து வருகிறது, இத்தகைய வசதியை வெள்ளைக்காரன் கொடுத்துவிட்டு போகாமல் இருந்திருந்தால் இன்றைய கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் வேலை வாய்ப்பிற்கும் போக்குவரத்திற்கும் மாற்றாக எதை பயன்படுத்தி இருக்க கூடும் என்று நினைக்கும் போது ரயில் சேவையின் மகத்துவம் பற்றி உணர முடிகிறது.
மிகவும் முக்கியமாக விளங்கும் ரயில் போக்குவரத்து மக்களின் பெருக்கத்திற்கு ஏற்ப பல வசதிகளை அதிகபடுத்திவந்தாலும், பயணச் சீட்டு முன்பதிவு என்ற மிகப்பெரிய சிறப்பான வசதியை ஏற்படுத்தி இருப்பது பல விதங்களில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக உள்ளது,
அதிகரித்து வரும் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க ரயில்களை அதிகரித்துள்ளதும், கணிணி மூலம் முன்பதிவு, இணையதளத்தின் மூலம் முன்பதிவு என்று பல சிறப்பான வழிகளை முன்பதிவிற்க்கென ஏற்ப்படுத்தியுள்ளது மிகவும் சிறந்த முறையாக விளங்கி வருகிறது. குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்வதற்கு கூட இயலாமல் எல்லா ஊர்களுக்கும் முன்பதிவு நிரம்பி காணப்படுவது, அதிசயம் ஆனால் உண்மை.
இதை பற்றி அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதாக தெரியவில்லை, அத்தனை பயணச்சீட்டுகளையும் முன்கூட்டியே அத்தனை சீக்கிரத்தில் எப்படி யார் முன்பதிவு செய்து நிரப்பிவிடுவார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது, இதனால் மக்களுக்கு பலவிதத்தில் தொல்லையாகவே இருந்து வருகிறது, எந்த ஊருக்கு முன்பதிவு செய்ய வேண்டுமானாலும் இதே நிலைமைதான்.
பயணச்சீட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து ஏஜெண்டுகள் நிரப்பிவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது, கமிஷனுக்காக ஏஜெண்டுகள் எல்லாப் பயணச்சீட்டுகளையும் முன்பதிவு செய்துவிடுவதால் பொதுமக்கள் முன்பதிவு செய்யும்போது முன்பதிவு செய்ய முடியாமல் போகிறது என்று கூறப்படுகிறது.
இந்திய தேசத்தின் பெரும்பாலான மக்களின் போக்குவரத்திற்கு அருமையான வசதியாக ரயில் இருந்தும் கமிஷன், ஏஜெண்டு என்ற குறுக்கீடுகளால் முன்பதிவு வசதி கிடைக்காமல் பலர் அவதிக்குள்ளாவது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த பிரச்சினையை தவிர்க்க அரசும் அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கைகளை மேற்க்கொள்ளாவிடில் இதற்க்கு தீர்வு காண்பது கடினம்.