FTC Forum
தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: சாக்ரடீஸ் on August 13, 2018, 12:32:37 PM
-
கைகள் இல்லையெனில் உலகம் இருண்டு விடாது!
இரண்டு கைகள், இரண்டு கால்கள், தீர்க்கமான கண்கள் என, மொத்த உறுப்புகளும் நல்ல நிலையில் இயங்கும் திறன் கொண்ட நாம், ஆடும் ஆட்டம் என்ன… பாடும் பாட்டு என்ன… தேடும் வார்த்தை என்ன… ஆனால், இரண்டு கைகளை இழந்து, வாழ்க்கையின் ஓரத்திற்கே சென்று விடும் நிலையில் உள்ளவர்கள், “ஓரமா… அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், எங்கள் கவனத்தைக் கூர்படுத்தி, காலால் அல்லது வாயால், ஓவியம் வரைவது மட்டுமே’ என்கின்றனர் சிலர். இதில், பெண்களும் அடக்கம். கேரளா, போத்தனிக்காட்டில் பிறந்தவர் ஸ்வப்னா அகஸ்டின். கைகள் இல்லாமல் பிறந்தவர். அதை இவர், குறையாகவே கருதவில்லை. எல்லா வேலைகளையும் காலாலேயே செய்யப் பழகிக் கொண்டார். எழுதுவது, ஓவியம் வரைவது என, கற்றுத் தெளிந்தார். பள்ளிப் படிப்பின் போது, பெற்றோர், ஆசிரியர்கள், நண்பிகள் என அனைவரின் உதவியையும் பெற்று, படிப்பை முடித்தார். தன் ஓவியங்களை கண்காட்சிகளில் வைத்தார். லதா மஹிந்த்ரா லங்க்டே என்பவர், விபத்தில் கைகளை இழந்தார். மனம் தளராமல், காலால், வாயால் ஓவியம் வரையக் கற்றுக் கொண்டு, ஓவியக் கலையில் பட்டப் படிப்பும் முடித்தார்.
சுனிதாவுக்கு, தசைகள் வலுவிழந்து போனதால், கை, கால்கள் முற்றிலும் செயலிழந்தன. தன் வாயை மூலதனமாகக் கொண்டு, ஓவியங்களை வரைந்து தள்ளுகிறார். இவர்களைப் போல, இந்தியாவில் இன்னும் சில ஆண், பெண், சிறுவர், சிறுமியர் உள்ளனர். இவர்கள் அனைவரையும் பாசத்துடன் அரவணைத்து, இவர்கள் ஓவியங்களை சந்தைப்படுத்தி, வாழ்க்கையை சுயமரியாதையுடனும் தன்னம்பிக்கையுடனும் நடத்த, மும்பையைச் சேர்ந்த ஓர் அமைப்பு உதவி வருகிறது. ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட் என்ற இடத்தில், 1912ல் பிறந்த அர்னுல்ப் எரிக் ஸ்டெக்மேன் என்பவருக்கு, இரண்டு வயதில் முதுகெலும்பில் போலியோ நோய் தாக்கியதால், கைகள் செயல்படும் சக்தியை இழந்தார். ஆனால், சிறு வயதிலேயே அவருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த விருப்பம் இருந்ததால், அவர் அத்திறமையை வளர்த்துக் கொண்டு, கால்களால் ஓவியங்கள் வரை வதில் புகழ்பெற்றார். தன்னைப் போன்ற பிறவி மற்றும் இடையில் மாற்றுத் திறனாளிகளானவர்களை இணைத்து, ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் என ஆவல் கொண்டார்.
கடந்த 1957ல் லிச்டென்ஸ்டீன் நாட்டில், “அசோசியேஷன் ஆப் மவுத் அண்டு பூட் ஆர்ட்டிஸ்ட்ஸ் பெயின்டிங் பீப்பிள்’ (ஏ.எம். எப். பி.ஏ.,) என்ற அமை ப்பை உருவாக்கினார். இன்று அந்த அமைப்பு, 74 நாடுகளில் இயங்கி வருகிறது. இதன் கீழ், 726 மாற்றுத் திறனாளி ஓவியர்கள், தங்கள் திறமையை வெளிப்படுத்தி, கண்ணியமான முறையில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவில், மும்பையில் இந்த அமைப்பு, 2009ல் துவக்கப்பட்டது. இதில் தற்போது, 15 மாற்றுத் திறனாளிகள் தங்கள் ஓவியத் திறமையை வெளிப் படுத்தி வருகின்றனர். இவர்கள், தங்களது வாய் மற்றும் கால் விரல்களில் பிரஷ்களைக் கொண்டு வரையும் ஓவியங்கள், வாழ்த்து அட்டைகள், காலண்டர்கள், பரிசுப் பொருட்கள், புத்தக அடையாள அட்டைகள், “டி-ஷர்ட்’கள், பொருட்கள் வாங்கும் பைகள் ஆகிய பல்வேறு வடிவங்களில் பொறிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. கலை ரசனையோடு உருவாக்கப்படும் இந்த ஓவியங்கள் பொறிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் மூலம், நமது மாற்றுத் திறனாளி ஓவியர்கள் தங்களது வாழ்க்கையை கவுரவமான முறையில் வாழ, நாமும் உதவி செய்ய முடியும்.
-
டாக்டர் ஆனார் கூலித் தொழிலாளி: கதையல்ல… நிஜம்...!
கூலித் தொழிலாளியாக இருந்த ஆவடியை சேர்ந்த தேவேந்திரன், இன்று டாக்டராகி, திறமைக்கு வறுமை தடையில்லை என்பதற்கு, வாழும் உதாரணமாக திகழ்கிறார்.
சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. “எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்’ என்றார் தேவேந்திரன்.
வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, “அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க’ என்று சொல்கிறார். “நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது’ என, தன் சாதனை பயணத்திற்கு, “பிரேக்’ போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.
நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். “மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க’ என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், “மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும். அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!’
-
இடது கையை இழந்த ஜூடோ வெற்றி வீரன் நிகிடோ...!
ஜப்பானில், டொக்கியோவில் வசித்து வந்து பத்து வயது சிறுவன் நிகிடோ, கார் விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்தவன். ஆனால் அவனுக்கு ஜூடோவில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், ஒரு மாஸ்டரை அணுகி ஜூடோ கற்றுக் கொள்வதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்தான். அவரும், அவனைத் தனது சீடனாக ஏற்றுக் கொண்டு, ஜூடோ கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். ஆனால், மூன்று மாதங்களாகியும் அவர் ஜூடோவில் ஒரே ஒரு அசைவை மட்டுமே அவனுக்க கற்அக் கொடுத்திருந்தார்.
ஒரு நாள் நிகிடோ, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் மெதுவாக “மாஸ்டர், இந்த அசைவைத் தவிர நீங்கள் வேறு அசைவுகளை ஏன் எனக்குக் கற்று தரவில்லை.’ “நீ இந்த ஒரு அசைவை மட்டும் தினமும் பயிற்சி செய்து வா, போதும். வேறு எதுவும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்று ஆசிரியர் பதிலளித்தார்.
ஒன்றும் புரியாத சிறுவன் நிகிடோ, ஆசிரியரிடம் நம்பிக்கை வைத்து, அந்த ஒரு அசைவை மட்டுமே தினமும் தீவிரமாக பயிற்சி செய்து வந்தான். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பின், மாஸ்டர் அவனது முதல் பந்தயத் தொடருக்கு நிகிடோவை அழைத்துச் சென்றார். வியப்பூட்டும் விதமாக, முதல் இரண்டு போட்டிகளிலும் நிகிடோ மிக எளிதாக வெற்றி பெற்றான். மூன்றாவது போட்டி சற்றே கடினமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு நிகோடோவின் ஒரே மாதிரியான ஜூடோ அசைவால் பொறுமையிழந்த எதிர்தரப்பு வீரர், அவனை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினார். ஆனால் நிகிடோவோ, தனக்குத் தெரிந்த அந்த ஒரே ஒரு அசைவை மட்டுமே உபயோகித்து அவரை எளிதாகத் தோற்கடித்தான். தனது வெற்றியை நம்ப இயலாத நிகிடோ, இறுதிப் போட்டிக்குத் தயரானான்.
இம்முறை அவருடன் ஜூடோ சண்டை போட இருந்தவர், உருவத்தில் பெரிவராகவும், வலிமையானவராகவும், அதிக அனுபவமுள்ளவராகவும் தோன்றினார். சிறிது நேர சண்டைக்குப் பின், நிகிடோ சோர்வுற்றதை கவனித்த நடுவர், அவனுக்கு அடிபட்டு விடப் போகிறதே என்ற கவலையில், சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்த முடிவு செய்தார்.
“வேண்டாம், அவன் தொடர்ந்த சண்டை போடட்டும்; ஒன்றும் ஆகாது’ என்று நிகிடோவின் மாஸ்டர் உறுதியாகக் கூறினார். போட்டி மீண்டும் துவங்கியபோதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நிகிடோவுக்கு எதிராக விளையாடியவர், கையில்லாத சிறுவன்தானே, என்ன பெரிதாக செய்து விடப் போகிறான் என்று சற்றே அலட்சியமாகிவிட, நிகிடோ அத்தருணத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, தனக்குத் தெரிந்த அந்த ஒரே அசைவால் அவரைத் தாக்கி நிலைகுலையச் செய்தான். பிறகென்ன, நிகிடோ அப்போட்டியை மட்டுமல்லாமல், அத்தொடரையே கைப்பற்றி, வெற்றிவீரனானான்.
வீடு திரும்பும் வழியில், இறுதிப் போட்டி வரை அவனுக்கு எதிராக விளையாடியவர்களின் பல்வேறு அசைவுகளைப் பற்றி நிகிடோவின் மாஸ்டர், அவனுக்கு விளக்கிக் கொண்டே வந்தார். மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்ட நிகிடோ, அவரிடம் கேட்டான்: “மாஸ்டர் ஒரே ஓர் அசைவை மட்டுமே வைத்துக் கொண்டு என்னால் எதிராளியை எப்படி எளிதில் வீழ்த்த முடிந்தது?’
“உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, ஜூடோவின் மிகக் கடினமான அசைவை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து, நீ அதில் மிகவும் தேர்ந்து விட்டாய். இரண்டாவதாக உனது அசைவை எதிர்கொள்ள, உனது கையைப் பிடித்துத் தடுப்பதுதானா ஜூடோவிலே உள்ள ஒரே ஒரு பாதுகாப்பு இயக்கம். உனக்கு இடது கை இல்லாததால், எதிராளிகளுக்கு அதை செய்ய முடியாமல் போனது. எனவே உனது பலவீனத்தால் தான் உன்னால் எளிதாக வெற்றி பெற முடிந்தது’ அதாவது நிகிடோவின் மிகப்பெரும் பலவீனம் அவனுக்கு மிகப்பெரும் பலமாக மாறி, அவனை வெற்றி பெறச் செய்தது.
சில நேரங்களில் நம்மிடம் சில பலவீனங்கள் உள்ளதாக நினைத்துக் கொண்டு, சூழ்நிலைகளையும், பிறரையும், அதிஷ்டத்தையும், ஏன், நம்மையுமே கூட குறை கூறிக் கொள்கிறோம்; ஆனால் ஒரு நாள் நமது பலவீனமே நமக்கு பலமாக மாறக்கூடும் என்பதை நாம் அறிந்திருப்பதில்லை.
நாம் ஒவ்வொருவருமே விசேஷமானவர்கள் மற்றும் முக்கியமானவர்கள்தான். எனவே, நமக்கு பலவீனங்கள் இருப்பதாக நினைக்காமல், நம்மை நாமே தாழ்வானவர்களாகவோ, உயர்ந்தவர்களாகவோ நினைத்தக் கொள்ளாமல், நமக்கு இறைவன் தந்த வாழ்க்கை என்ற வரத்தை முழுவதுமாக உபயோகித்து, அதில் நம்மால் முடிந்த அளவு வெற்றி பெற முயற்சிப்போமாக!
-
எட்டாம் வகுப்பு தேர்வை எழுதிய 60 வயது பெண் ..!
தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ரத்னாம்பாள், எட்டாம் வகுப்பு தனித்தேர்வை ஆர்வமுடன் எழுதி வருகிறார். இவரது ஆர்வத்தை ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர்.
எட்டாம் வகுப்பு தனித்தேர்வு, கடந்த 7ம் தேதி முதல் நடந்து வருகிறது; இன்று அறிவியல் பாடத்தேர்வு நடக்கிறது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று சமூக அறிவியல் பாடத்தேர்வை 216 பேர் எழுதினர். இத்தேர்வை, தாராபுரம், என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்த ரத்னாம்பாள் எழுதினார். இவருக்கு வயது 60.
அவர் கூறுகையில்,””45 ஆண்டுக்கு முன் ஐந்தாம் வகுப்பு வரை பயின்றேன். தொடர்ந்து கல்விபயிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களுக்கு பிறகு, தற்போது தனியாக வசித்து வருகிறேன். பலர் கல்வி பயில உதவி செய்து வருகிறேன். “”கடந்த 20 ஆண்டுகளாக யோகா, தியானம் செய்து வருகிறேன். பள்ளி மாணவர்கள் உட்பட மற்றவர்களுக்கும் யோகா கற்றுக்கொடுக்கிறேன். என் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது தேர்வு எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளேன். தியானம் செய்வதால், மனப்பாடம் செய்ய சுலபமாக இருக்கிறது. படித்ததும் மனப்பாடம் செய்யவும், மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ளவும் முடிகிறது. அடுத்து பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி வெற்றி பெறுவேன்,” என்றார்.
வாய் பேச இயலாத, காது கேளாத மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி கலா(18) என்பவரும் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். இதுகுறித்து அவரது தாய் இந்திரா கூறுகையில்,””தம்பி மகளான கலாவை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். பிறப்பிலேயே பாதிப்பு இருந்தது. ஐந்தாம் வகுப்பு வரை சாதாரண பள்ளியில் பயின்று வந்தாள். அதன் பின், தற்போது வீட்டில் வைத்து கற்றல் பயிற்சியை அளித்து வருகிறேன். பிற மாணவர்களை போல் நன்றாக படிக்கிறாள். தொடர்ந்து ஊக்கம் அளித்து, இவளது குறைகளை கடந்து சாதிக்க வைப்பேன்,” என்றார். பெற்றோரின் வற்புறுத்தலுக்காக மட்டுமே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வாய்ப்பு இருந்தும் தவறாக பயன்படுத்தும் மாணவர்கள் மத்தியில், படிப்பின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகத்தை, தேர்வு எழுத வரும் சக மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
-
நம்பிக்’கையால் வெற்றி பெற்ற நிக்
அந்த இளைஞருடைய பெயர் நிக். இருபத்தெட்டு வயது. நடக்கிறார், சிரிக்கிறார், பேசுகிறார், வாசிக்கிறார், கால்ஃப் விளையாடுகிறார். கீழே விழுகிறார், மீண்டும் அவரே சிரமப்பட்டு எழுந்து நிற்கிறார்…
கொஞ்சம் பொறுங்க சார். 28 வயது ஆள் இதையெல்லாம் செய்யறது ஒரு பெரிய விஷயமா? இதைப்போய் மகா அதிசயம் மாதிரி சொல்ல வந்துட்டீங்களே!
அதிசயம்தான் சார். இவ்வளவையும் சர்வசாதாரணமாகச் செய்கிற நிக்கிற்கு இரண்டு கைகளும் இல்லை. இரண்டு கால்களும் இல்லை!
1982-ம் வருடம் ஆஸ்திரேலியாவில் நிக் பிறந்தபோதே அவருக்குக் கைகள், கால்கள் இல்லை. வெறும் உடம்பு மட்டும்தான். இதற்கு என்ன மருத்துவக் காரணம் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
காரணம் கிடக்கட்டும், இந்தக் குழந்தையை இப்போது என்ன செய்வது?நிக்கின் பெற்றோர் துடித்துப்போனார்கள். “உடம்பில் ஒரு சின்ன ஊனம் உள்ளவர்கள்கூட இயல்பாக வாழமுடியாமல் சிரமப்படுவதைப் பார்க்கிறோம், இந்தப் பிள்ளை கையும் காலும் இல்லாமல் எப்படி வளரப்போகிறது?
ஆனால் பெற்றோர் அவனை நல்லவிதமாக வளர்க்க முடிவு செய்தார்கள். ஊனமுற்றோர் பள்ளியில் சேர்க்காமல், வழக்கமான பள்ளியில் சேர்த்தார்கள். அப்படி சேர்ப்பதற்கே நிறைய போராட வேண்டியதாயிருந்தது. ஆனால் பள்ளியில் சக மாணவர்களின் கிண்டலுக்கு ஆளானான் சிறுவன் நிக். இந்த கேலியைப் பார்த்த சிறுவன் நிக் தற்கொலை செய்ய முடிவு செய்தான்.
நல்லவேளையாக, நிக் தற்கொலை செய்துகொள்ளவில்லை. “எனக்காக இவ்ளோ கஷ்டப்பட்ட எங்க அம்மா, அப்பாவை நினைச்சுப் பார்த்தேன். சாகறதுக்கு மனசு வரலை!’அதன்பிறகு, நிக் நிறையப் படிக்க ஆரம்பித்தார். அவரைப்போலவே உடல் குறைபாடுகளால் அவதிப்பட்டவர்கள், அதைத் தைரியமாக எதிர்த்து நின்று ஜெயித்தவர்களைப் பற்றியெல்லாம் வசித்து, கேட்டுத் தெரிந்துகொண்டார்.
அப்போதும், அவருக்கு ஒரு சந்தேகம் மட்டும் தீரவில்லை. “என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் நான் ஏன் வாழணும்?’
விரைவில், அந்தக் கேள்விக்கும் பதில் கிடைத்தது. நிக் தன்னுடைய ஊனத்தைப்பற்றிக் கவலைப்படாமல் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார் என்பதைக் கவனித்த சிலர், “நீங்க இந்த விஷயத்தை மேடையேறிப் பேசணும்’ என்றார்கள். அது நல்ல யோசனையாகப் பட, இப்போது நிக் மேடைப் பேச்சாளராகிவிட்டார். அவரது வாழ்க்கை புத்தகமாகவும் வந்திருக்கிறது. “லைஃப் வித்தவுட் லிமிட்ஸ்’ என்ற தலைப்பில்.
-
விவேகானந்தரின் வெற்றி கதை !
கோல்கட்டாவில்,விஸ்வநாத தத்தர்- புவனேஸ்வரி அம்மையாரின் தவப்புதல்வரறாக, 1863, ஜனவரி 12ல் அவதரித்தார். நரேந்திரன் என பெயர் இட்டனர். வடமொழி, ஆங்கில நூல்கள் பலவற்றைக் கற்று ஆன்மிக ஞானம் அடைந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சர் அவரைத் தனது சீடராக ஏற்றுக்கொண்டார். துறவியான பிறகு அவருக்கு வந்த பெயர் விவேகானந்தர். விவேகம் இருந்தால் தான் ஆனந்தம் பிறக்கும் என்பதைத் தன் பெயர் மூலம் இந்த உலகுக்கு சுட்டிக்காட்டினார்.இமயம் முதல் குமரி வரை பயணம் செய்து, ராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் போதித்தார்.
இந்து மதத்தின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்ட, சிகாகோவில் நடந்த சர்வமத மகாசபை மாநாட்டில் பங்கேற்று, அரியதொரு சொற்பொழிவை நிகழ்த்தினார்.
மற்றவர்களெல்லாம் அங்கு வந்திருந்தவர்களை “லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்’ என அழைத்து பேச்சை ஆரம்பிக்க, விவேகானந்தர் தனக்கே உரிய தனித்துவத்துடன் “டியர் பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்’ என ஆரம்பித்து, உலக மக்கள் யாவரும் இந்தியர்களின் சகோதர சகோதரிகள் என்ற கருத்தை ஆணித்தரமாகச் சொன்னார். அந்த ஒரு வார்த்தைக்கே அரங்கம் அதிர்ந்தது.
“”கோழைகளுடனோ அல்லது அர்த்தமற்ற அரசியலுடனோ எனக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை. கடவுளும் உண்மையும் தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல். அது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்றவை எல்லாம் வெறும் குப்பை,” என்று முழங்கினார்.ஒருநாள், அவர் தற்செயலாகக் கைகட்டி கம்பீரமாக கூட்ட அரங்கின் முன் நின்றதை ஒரு போட்டோகிராபர் படமெடுத்தார். அதை சிகாகோவிலுள்ள “கோஸ்லித்தோ கிராபிக் கம்பெனி’ போஸ்டராக அச்சடித்து நகர் முழுக்க தொங்க விட்டது. அந்தப் படம் தான் இன்றுவரை விவேகானந்தரின் கம்பீர தோற்றத்தை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
விவேகானந்தர் எல்லா உயிர்களையும் தமதாகவே கருதினார். அதற்கு காரணம் அவர் குருவிடம் கற்ற பாடம் தான். குரு ராமகிருஷ்ணர், தொண்டை புற்றுநோயால் சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார்.””நீங்கள் தான் காளி பக்தர் ஆயிற்றே! அவளிடம் நேரில் பேசுவீர்களே! போய் அவளிடம் குணமாக்க கேளுங்கள்,” என்றார் விவேகானந்தர்.””கேவலம், இந்த உடலைக் குணமாக்குவதற்காக அவளிடம் நான் கையேந்தமாட்டேன்,’ ‘ என உறுதியாகச் சொல்லிவிட்டார் குருநாதர். விவேகானந்தர் வற்புறுத்தவே, வேறு வழியின்றி காளியை வழிபட்டு வந்தார்.””அம்பாள் என்ன சொன்னாள், குணமாக்கி விடுவாளா?” என்று விவேகானந்தர் ஆவலுடன் கேட்கவே,””இல்லை! நீ சாப்பிடாவிட்டால், உனக்காக பல வாய்கள் சாப்பிடுகிறதே! அந்த திருப்தி போதாதா!” என அவள் திருப்பிக்கேட்டாள். நான் வந்துவிட்டேன்,” என்றார்.மற்றவர்கள் சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல என்று நினைத்த குருவின் சமரசப் பார்வை, விவேகானந்தரையும் ஒட்டிக்கொண்டது.
ஜெய்ப்பூர் மன்னர் அரண்மனைக்கு வந்தார் விவேகானந்தர். அங்கே இசைநிகழ்ச்சி நடந்தது. துறவி என்பதால் அதைக்காண செல்லாமல், தன் அறையில் இருந்தார். அப்போது, ஒரு பெண் பாடிய பாடல் அவருக்கு கேட்டது. அதில் சோகம் இழையோடியது. அதைக் கேட்டு மனம் இளகிய அவர் இசைநிகழ்ச்சி நடந்த இடத்துக்குச் சென்றார்.””இவள் நடனப்பெண். இழிந்த தொழில் செய்பவள். மற்றவர்கள் பார்வையில் இவள் இழிந்தவளாக இருக்கலாம். ஆனால், இவளது பாடல் எனக்கு புதிய பாடத்தைத் தந்தது. தன் வாழ்க்கை சிரமத்தை அவள் பாடலாகப் பாடினாள். அதைக் கேட்டுஉள்ளம் உருகினேன்,” என்றார். அவளை அம்பாளாக பார்த்தார். அவரது உருக்கமான பேச்சைக்கேட்ட அவள், அவரது வருகை தன்னை ஆசிர்வதித்ததாகச் சொன்னாள். இழிந்த தொழில் செய்தவர் களையும் தெய்வமாகப் பார்த்தவர் விவேகானந்தர்.
அலைகள் சீறும் கன்னியாகுமரி கடலில், அவர் நீச்சலடித்துச் சென்று நடுப்பாறையில் அமர்ந்து தியானம் செய்த வீர வரலாறை உலகம் மறக்காது. அந்த வீரத்துறவியின் இரக்கம் நம்மை ஆட்கொள்ளட்டும். அவரது வீரம் பொதிந்த வார்த்தைகள் நமக்கு துணிவைத்தரட்டும். அந்தத் துணிவு வெற்றிக் கனியை பறித்துத் தரும்.
-
அன்பு பயமறியாதது!
ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் அப்போது என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா?
இவ்வுதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உண்மையான அன்பின் இலக்கணத்தை விளக்குகிறார்: அன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும் அடிமைப்படும் அளவிற்கு பயம் அதிகரிக்கிறது. தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒருவன் நினைப்பானேயானால் பயம் அவனைப் பற்றிக் கொள்வது நிச்சயம். தான் அற்பன் என்ற எண்ணம் குறையக் குறைய பயமும் குறையும். துளியளவு பயம் இருந்தால்கூட அங்கே அன்பு இருக்க முடியாது. அன்பும், பயமும் இணைந்து இருக்க முடியாதவை. கடவுளை நேசிப்பவன் அவரிடம் பயப்படக்கூடாது. பயத்தின் காரணமாக இறைவனை நேசிப்பவர்கள் மனிதர்களில் கடைப்பட்டவர்கள்.; பக்குவப்படாதவர்கள். தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் இவர்கள் இறைவனை வழிபடுகிறார்கள். இப்படி தண்டனைக்கு பயந்து இறைவனை வழிபடுவது, வழிபாடு என்பதையே தரம் தாழ்த்துவதாகும். அத்தகைய வழிபாடு சற்றும் பக்குவப்படாத தாழ்ந்தநிலை வழிபாடாகும். மனத்தில் பயம் இருக்கும்வரை அங்கே அன்பு எப்படி வர முடியும்? பயங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வது அல்லவா அன்பின் இயல்பு!…கடவுள் மீது நாம் கொள்கின்ற பயம் மதத்தின் துவக்கமே; அவர்மீது கொள்ளும் அன்பே மதத்தின் முடிவு. இங்கு பயம் அனைத்தும் ஓடிவிட்டது. அன்பின் மூலம் வழிபாடு செய்வதே உண்மையான ஆன்மிக வழிபாடு. கடவுள் இரக்கமுள்ளவரா என்ற கேள்வியே இங்கு எழுவதில்லை. அவர் கடவுள், அவர் எனது அன்பர். அவர் எல்லாம் வல்லவரான சர்வ சக்தி வாய்ந்தவரா, ஓர் எல்லைக்கு உட்பட்டவரா, உட்படாதவரா என்ற கேள்விகளுக்கும் இங்கே இடமில்லை. அவர் நல்லது செய்தால் நல்லது. தீமை செய்தாலும் அதனால் என்ன? எல்லையற்ற அந்த அன்பைத் தவிர மற்ற எல்லா குணங்களும் மறைகின்றன…கடவுளே அன்பு, அன்பே கடவுள்…தெய்வீக அன்பாக மாறிவிடுவதுதான் உண்மையான வழிபாடு..அன்பின் உருவமாக எண்ணி அவரை வழிபடுங்கள். எல்லையற்ற அன்பு என்பதே அவரது பெயர். இது ஒன்றே அவரைப் பற்றிய விளக்கம்…தகப்பன் அல்லது தாய்க்குக் குழந்தையின்மீது உள்ள பாசம், கணவனுக்கு மனைவிமீதும், மனைவிக்குக் கணவன்மீதும் உள்ள காதல், நண்பர்களுக்கிடையே உள்ள நட்பு இவையனைத்தும் ஒன்றாகத் திரண்ட பேரன்பைக் கடவுள்மீது செலுத்தவேண்டும்…கடவுள்மீது நாம் அன்பு செலுத்த வேண்டிய முறை இதுவே: எனக்கு செல்வம் வேண்டாம், உடைமை வேண்டாம், கல்வி வேண்டாம், முக்தியும் வேண்டாம்…ஆனால் ஒன்றுமட்டும் அருள்வாய் நான் உன்னை நேசிக்கவேண்டும். அதுவும் அன்பிற்காக அன்பு செலுத்த அருள்வாய்…இறைமகிமை ஓங்கட்டும்! அன்பின் வடிவான அவன் புகழ் ஓங்கட்டும்!