5
« Last post by Vethanisha on Today at 03:40:49 PM »
நடராஜன் அருளினிலே
முகபாவத்தின் சிணுங்கலிலே
இராகத்தின் ரம்யத்திலே
தாளத்தின் தொன்மையிலே
பக்தியின் வெளிப்பாடாய்
ஆன்மாவின் மொழியாய்
உணர்வுகளின் சங்கமமாய்
வாழும் என் கலையே
தமிழர் கண்ட
பரதமே
நங்கை இவள் நடனத்திலே
பல கதைகளும் உண்டு
உண்மையிலே
மங்கை இவள் எழிலினையே
பரத முத்திரையில் காண்போம்
சில வரிகளிலே
படாகம் (வானம் ,நதி )
வானத்தையும் நதியையும்
அசைவிலே
இணைக்கும் கொடி இடையாள்
திரிபடாகம் ( அம்பு, தீ )
தீயின் ஜ்வாலையையும்
விரல்களில் உயிர்ப்பிக்கும்
கலைமதியாள்
கர்த்தரிமுகம் (கத்தரி ,மின்னல் )
மின்வெட்டு காலங்களிலும்
கத்தரிக்கும் பார்வையினால்
ஒளி ஊட்டும்
விழியாள்
மயூரம் (மயில் )
அசைந்தாடும் சாயலிலே
மயிலும் மையல் கொள்ளும்
அபிநயத்தாள்
அர்த்தசந்திரம் (பிறை நிலா )
கரங்களில் பிறைநிலா மலர,
சாந்த சொரூபிணியாய்
உணர்வை தாலாட்டும்
நிலாமுகத்தாள்
அலபத்மம் (தாமரை)
இரு இதழ் தாங்கும் புன்னகையை
தாமரை இதழும்
நாணத்தோடு நோக்கும்
பொன்னிறத்தாள்
அடவிலே தொடங்கி
நடவிலே உயர்ந்து
அபிநயத்திலே இலயித்து
வாழ்வாங்கு வாழட்டும்
அவளது கலையும்
அதன் பயணமும் ...