7
« Last post by Ninja on November 26, 2025, 12:05:17 PM »
உள்ளத்தை துளைக்கும்
நெடிய
நினைவுக்குழியின் ஆழத்திலிருந்து
மேலெழும்பி வருகிறேன்.
கரையேறி வந்தடைந்த முகட்டிலிருந்தும் மீண்டும் உள்ளிழுக்கிறது நினைவுக்குழி
வீழ்ந்தாலும் மீண்டெழ வைக்கும்
மீண்டாலும் மீண்டும் விழ வைக்கும்
இந்நினைவுக்குழியின்
ஒவ்வொரு பிளவிலும்
சொல்வதற்கு ஆயிரம் கதைகள் உண்டு.
மீண்டும் மீண்டும் ரணங்களை
கீறிப் பார்த்து,
சிதலங்களின் சாளரங்கள் வழி
வானம் பார்த்து
ஆறுதலடையும் ஓர் எளியவன் நான்
மாபெரும் இம்மனக்கோட்டையின்
மதில் மேலேறி
என்னை நானே ஆசிர்வதித்துக் கொள்ளும் சில கணங்கள்
உங்களுக்கு புரியாமல் போகலாம்
உங்கள் ஆழ்மனக் காயங்களின்
மீதேறி ஒரு நடனம் புரிந்து பாருங்கள்
பின் நீங்களும்
உங்கள் மதில்களின் மீதேறி
உங்களின் மீட்பராவீர்கள்
இதற்கெல்லாம் நான் அஞ்சியிருந்தேன்
இதற்கெல்லாம் நான்
காரணமாயிருந்தேன்
இதற்கெல்லாம் நான்
விலகியிருந்தேன்
என இடையறாத
இந்த கரையேறுதல்களில் வழி
எனை நானே கற்று தேர்ந்தேன்.
நெருங்குதலும், விலகுதலும்
ஒரு வேடிக்கையென
விளையாடிய பார்த்த
தருணங்களை மலை முகட்டிலிருந்து
திரும்பி வர முடியாத தூரங்களுக்கு
வலசை போகும் பறவைகளுக்கு
பரிசளித்தேன்
அவை மீண்டும் திரும்பி வரக்கூடும்
எனினும் கரையேறுதலில்
கைதேர்ந்தவன் நான்.
இருப்பினும் நான் கரையேற முடியாத தொலைவுகளையும்
தொட்டுவிட முடியாத தூரங்களையும்
திரும்ப திரும்ப தேடிப் போகின்றேன்
இந்த விழைவு தான்
கொஞ்சமேனும் எனை இன்னும்
வாழ வைக்கிறது
இந்த தேடல் தான் இன்னுமேனும்
கொஞ்சம் எனை உயிர்ப்போடு
வைத்திருக்கிறது.
நான்,
செல்வதற்கு பாதைகள் இல்லாதவன்
வாழ்வதற்கு தேசங்கள் இல்லாதவன்
ஆனால் ஏறுவதற்கு
சில மலைகளும்
சில கரைகளும்
சில கதைகளும்
என்னிடம் உண்டு
அதுவே என் வாழ்வின் மீதான பிடிப்பு