9
« Last post by Thenmozhi on December 16, 2025, 05:14:02 AM »
கார்மேகங்கள் விலக,
கோடி விண்மீன்கள் நடுவே
தவழ்ந்து வரும் வெண்ணிலாவே!
தொலைதூரத்தில் உன் புன்னகை ஒளிவீசி
இரவின் இளவரசியாய் அலங்கரிக்கின்றாய்!
மாடியில் இருப்பவனையும்,
குடிசையில் இருப்பவனையும்
இரசிக்க வைத்து மகிழ்விக்கின்றாய்!
குழந்தைக்கு சோறு ஊட்ட,
காதல் மொழி பேச,
கூட்டாஞ்சோறு உண்டு மகிழ
எம்முடன் இருக்கும் தேவதை நீ
வெண்ணிலாவே!
நிலாவே உன் ஒளியில் கல்வி கற்ற மகான்கள் ஏராளம்!
நிலாவே கொஞ்சம் நில் !
உன்னை வர்ணிக்கும் போது
உன்னை விட பேரழகி தென்படுகிறாளே
என் கண்களில்!
நிலவின் ஒளி முகத்தில் பிரகாசிக்க,
கார்மேக கூந்தல் காற்றில் அசைய,
வெண்ணிற ஆடை அணிந்து சமாதான ஒளி விளக்காய்,
அஞ்ஞான இருளை நீக்கி மெஞ்ஞான ஒளியை தேடி,
கரங்களில் நூல் ஏந்தி கல்வியறிவு இயற்றுகின்றாய் பெண்ணே!
விளக்கின் ஒளியில் கல்வி பயில தொடங்கினாய்
மின்சாரம் இல்லாத காலத்தில் பெண்ணே!
அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு?
என்று கூறியதை முறியடித்து விட்டாய் பெண்ணே!
விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை
சாதித்துக் கொண்டு தான் இருக்கின்றாய் பெண்ணே!
அமைதியான மனசு வேண்டும் என்று தான்
நிலாவை தேடி மாடி வந்தாயோ?
அவள் உன் கூடவே உலா வருவாள் நிழலாய் அன்புத் தோழியாய்!
புத்துணர்ச்சி தரும் தேநீரை அருந்தி விடு!
புத்தகத்தில் கற்ற அறிவினை மெருகூட்டிடு!
புது உலகம் படைத்து விடு!-பெண்ணே!
விளக்கு தன்னை அர்ப்பணித்து
ஒளி தருவது போல் உதவுவோம் மற்றவர்களுக்கு!
விண்மீன்கள் தொலைவில் இருந்து
ஒளிர்வது போல் நேசிப்போம் நம் உறவுகளை!
விண்ணில் வெண்ணிலா பிரகாசிப்பது போல்
சாதிப்போம் வாழ்வில்!