13
« Last post by joker on February 20, 2026, 02:08:03 PM »
அழகான தலைப்பு
பள்ளி விடுமுறையும் பாட்டி வீடும்
பள்ளியில் இறுதி நாள் தேர்வு எழுதி வீட்டுக்கு வந்ததும் புத்தக பையை
இறக்கி வைக்கும்போது புத்தகப்பையின் சுமை மட்டும் அல்ல,
மனசின் சுமையும் இறங்கும்
பாட்டி வீட்டுக்கு செல்லும் நாளுக்காய் காத்திருக்க துவங்கும் மனம்
ஊரிலோ பாட்டி புத்தாண்டு பிறந்ததும் கேட்க துவங்கிடுவாள் அம்மாவிடம்
எப்போ வரீங்க , பிள்ளைகளையாச்சும் அனுப்பிவிடுங்க என்று
அழகான இரவு ரயில் பயணம் , கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தபின் எப்போ தூங்குவோம் என தெரியாது
சட்டென்று அழகான நறுமணம் , சில்லென்ற காற்று , எழுப்பி விடும் , சன்னலில் பார்க்க அழகான
பச்ச பசேல் என்ற மரங்கள் , ரயிலை விட வேகமாய் கடப்பதாய் தோன்றும்,
இரயில் நிலையத்தில் இறங்கி , பேருந்தில் பாட்டியை காண ஆவலாய் ஒரு பேருந்து பயணம் , சன்னல் இருக்கைக்கு அண்ணனிடம் கெஞ்சி அமர்ந்து , இயற்கையை ரசித்து , நிறுத்தத்தில் இறங்கி , வீடு நோக்கி வயல்வெளிகளை கடந்து நடக்க , வரும்வழியில் இன்னாருடைய மகன் தானே நீ என்று பல அப்பத்தாக்கள் ஆசையா கேள்விக்கணைகளை தொடுக்கும், பாட்டியை காணும் ஆவலில் கால்கள் ஓடும் ,
வீட்டிலோ சூரியன் உதிக்கும் முன்னே எழுந்து வாசலில் , எங்கள் வருகைக்காக காத்திருப்பாள் பாட்டி , ஓடி சென்று அவளை அணைக்க , ஒரு வருடத்திற்கான அத்தனை சேமிப்பையும் வட்டியுடன் மூச்சு முட்ட முத்தமாய் தந்திடுவாள்
குளிச்ட்டு வாங்க பலகாரம் செய்திருக்கேன் என்பாள் , ஆசையாய் தேடி தேடி எடுத்தி வைத்திருப்பாள் , தோட்டத்தில் இருந்து மாங்காயும் , பலாப்பழமும் , ஆசையாய் ஊட்டி விட இரட்டிப்பு இனிப்பு எங்களுக்கு கிடைப்பதாய் உணர்வோம் ,
கோவிலுக்கு அவள் கையை பிடித்து அழைத்து செல்வாள் , தோட்டத்திலும் அவளோடு நடப்போம் , இயற்கையை ரசிப்போம் , வழியில் காண்போரிடமெல்லாம் என் பேரன் பட்டினத்தில் இருந்து வந்திருக்கான் என்று பெருமையுடன் சொல்லும்போது உடல் சிலிர்க்கும் , அவள் மடியில் கிடந்து ,ஏழு மலை ஏழு கடல் கடந்த ராட்சசன் உயிர் இருக்கும் என அவள் சொல்லும் பேய் கதைகளை கேட்டு பயத்தில் அவளை அணைத்திடுவோம், , மழை வரும் நேரம் அர்ஜுனா அர்ஜுனா சொல் என்பாள் , தினமும் அவள் சொல்லும் கதைகள் கேட்டு உறங்குவோம் .
மாலையில் , நேந்திரம் பழம்பொரி, சிப்ஸ் என்று ஆசையாய் அவளே செய்திடுவாள் , சித்தி , பெரியப்பா குழந்தைகள் என்று ஓடி ஆடி கழித்திடுவோம், கீழ விழுந்த மாங்காய் தின்னாமல் ,தோட்டத்தில் கல் எரிந்து வீழ்த்தும் மாங்காய் சுவை என்றும் அலாதி தான் எங்களுக்கு
இது ஒரு புறம் இருக்க , வீட்டுக்கு மாமன் மகள் வந்து விட்டால், சின்ன ராசாவ கையில புடிக்க முடியாது என்பது போல மனசிற்குள் பட்டாம்பூச்சி சிறகடிக்கும் , பாட்டியோ அவள் உனக்கு தான் என்று உறவினர் முன் சொல்கையில் எக்ஸ்ட்ரா குதூகலம் தொற்றிக்கொள்ளும் மனதிற்குள்
பழைய சோறாக இருந்தாலும் பாட்டியின் கையில் ஊட்டி விட அமிர்தமாய் இறங்கும், தொலைபேசி தொல்லை தந்ததில்லை , தொலைக்காட்சியும் அத்தியாவசியமில்லாததாகி போயின .
ஒரு வருடத்தில் நடந்த கதைகளை ஒவ்வொன்றாய் ஒப்பித்திடுவோம் , பேசி பேசி தீராத கதைகள் அவை
விடுமுறை கழிந்து விட்டு விலகுகையில் இங்கயே இருந்திடு ராசா என்பாள் , கண்ணீர் எங்களை ஆசுவாச படுத்த ஓடி வரும்,
அவள் சேலையில் முடிந்து வாய்த்த நாணயங்களிலிருந்து எடுத்து ஒவ்வொருவருக்கும் ஒன்று என கொடுப்பாள், இனிப்பு வாங்கி சாப்டுக்கோ என்று
அடுத்த சில நாட்களுக்கு பள்ளியில் அந்த அனுபவ பகிர்தலில் செல்லும் , மீண்டும் மனம் காத்திருக்க துவங்கும் அடுத்த விடுமுறையை நோக்கி
ஒரு மாதம் பல பல காலத்தால் அழியாத பல பல நல்ல நினைவுகளை தந்து விட்டு செல்லும்
நினைவுகளை தட்டி எழுப்ப செய்தமைக்கு நன்றிகள் பல FTC க்கு
***JOKER***