20
« Last post by Yazhini on Today at 12:23:18 PM »
உழைப்பினால் மலர்ந்தது இவ்வுலகு
உழைப்பாளிகளால் செதுக்கப்படுகிறது மனித வாழ்வு.
காணும் இடமெங்கும் மலைக்கவைக்கும்
கடும் உழைப்பின் கைவண்ணங்கள்
இல்லத்தில் தொடங்கி பிரபஞ்சம் வரை
பரந்து விரிந்து கிடக்கும்
ஆழ் கடல் முதல் முகடுகள் வரை
உயர்ந்து பிரமிக்க வைக்கும்
உழைக்கும் சோர்வரியா சிவந்த கரங்கள்...
சிறு துரும்பு முதல்
பலவற்றை கற்க பயன்படும்
இணையம் வரை
உண்ணும் உணவு முதல்
அலங்கரிக்கும் பொருட்கள் வரை
அனைத்திற்கும் உயிர் கொடுக்கும்
உழைப்பவரின் கரடுமுரடான கரங்கள்...
உருவாக்கப்படும் ஒவ்வொரு படைப்பிலும்
சிந்தும் வியர்வை துளிகளோடு
கலந்திருக்கும் குருதியின் மணம்...
உணவாகினும் உடையாகினும் பொருட்களாகினும்
நாம் வீணாக்கும் ஒவ்வொன்றும்
ஒருவரின் வியர்வையின் பயனை...
அவர்தம் உழைப்பின் கனியை...
உழைப்பவரின் அருமை உணராமல்
இருப்பது சரியா?
சிந்தியாமல் இருப்பது முறையா?
மலர்ந்திடும் ஒவ்வொரு நாளும்
உழைப்பவரின் தினம் ஆகட்டும்
சுணக்கத்தை அகற்றும் முயற்சியாகட்டும்
உழைப்பால் உயர்வோம்..
முயன்று சாதிப்போம்... 💪💪💪