30
« Last post by Oonjal on March 20, 2026, 09:11:48 AM »
"துள்ளாத மனமும் துள்ளும்"
பூனே ரயில் நிலையத்தில் தொடங்கும் படம். ரயிலில் சந்திக்கும் ஒரு காலேஜ் குழுவினர்களிடம் தன் முன்கதையை குட்டி (விஜய்) சொல்வதாக போகும் கதை. இன்னிசை பாடிவரும் பாடலில் குட்டியின் குரலை கேட்கும் ருக்குமணி (சிம்ரன்) முகமறியா குட்டியின் ரசிகையாகிறார். ஆனால் நேரில் குட்டியை பார்க்கும்போதேல்லாம் ஒரு ரவுடியாக காண்கிறார்.
பின்னணி பாடகர் ஆசையில் ஊரிலிருந்து மெட்ராஸ் வரும் குட்டி கிடைத்த வேலை செய்து வருகிறார். குட்டியின் தவறால் ருக்குவின் பார்வை பறிபோகிறது. அதன்பின் ருக்கு சந்திக்கும் சோதனைகள் அதிலிருந்து வெளிவர உதவும் குட்டி என்று படம் நகர்கிறது. ஆப்ரேஷன் பண்ணினால் ருக்கு கண் பார்வை வர வாய்ப்பு உள்ளது என டாக்டர் கூறுகிறார். அந்த சமயத்தில் குட்டியின் அம்மா தன் கண்கள் ருக்குக்கு என்று எழுதி வைத்து விட்டு இறந்து போகிறார். ஆப்ரேஷன் செலவுக்காக தன் ஒரு கிட்னியை தானம் பண்ண பூனே செல்கிறார் குட்டி. அதே நேரத்தில் இங்கே ருக்குவின் ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்து கண் பார்வை கிடைக்கிறது.
பூனேயில் ஆப்ரேஷன் முடிந்து திரும்பும் போது ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தினார் என்று கைது செய்தனர். 7 ஆண்டு ஜெயில் தண்டனை முடிந்து மெட்ராஸ் செல்கிறேன் என்று தன் முன்கதையை சொல்கிறார். மீதி கதையை தெரிந்து கொள்ள உங்களை தேடி வருகிறோம் நீங்கள் முன்னாடி போய் ருக்குவை சந்தியுங்கள் என்று அனுப்பி வைக்கின்றனர். குட்டி பழகிய இடங்களில் தேடி போக அங்கே யாரும் இல்லை. அப்போது ஒரு வாகனத்தில் ருக்கு செல்வதை கண்டு பின்னாடியே சென்று ருக்கு என்று அழைக்க ருக்கு குட்டியை ரவுடியாக நினைத்து கைது செய்யுங்கள் என்று ஆணையிட போலீசார் குட்டியை கைது செய்து அடித்து உதைத்தனர்.
அந்த நேரத்தில் ஒரு பஸ்சில் இன்னிசை பாடிவரும் பாட்டு சத்தம் கேட்டு அந்த பஸ்சை நிறுத்தி "நீங்க குட்டியா" என்று ஒவ்வொருத்தரிடமும் ருக்கு கேட்க "நீங்கதான் ருக்குவா" உங்களை பார்க்க தானே குட்டி வந்தார் என்று கூற அப்போ வெளியே "இன்னிசை பாடிவரும்...." பாட்டை குட்டி பாட ஓடிவரும் ருக்கு குட்டியை பார்த்து அதிர்ச்சியாகி "குட்டி உன்னால் தான் நான் படிச்சேன் உன்னால் தான் நான் கலெக்டரா இருக்கேன். உன்னை பார்க்கும்போது எல்லாம் தப்பாக நினைத்தேன் "என்னை மன்னித்து விடு" என்று அழ இந்த காட்சியில் என்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுதேன்.
இத்திரைப்படம் 100 முறைக்கும் மேல் நான் பார்த்த ஒரே படம். பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் விட வைத்த திரைப்படம். விஜய் சிம்ரன் அருமையாக நடித்துள்ளனர். இருவரின் கெமிஸ்ட்ரி படத்தின் பலம். இயக்குனர் எழிலின் முதல் படம் என்று சொன்னால் நம்பமுடியவில்லை. காதலுக்கும் தியாகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து உணர்ச்சிகரமான காட்சிகளுடன் இயக்கியுள்ளார் . எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். "பளபளக்குது புது நோட்டு...." இந்த பாடல் நம்மை குத்தாட்டம் போட வைக்கும். "இன்னிசை பாடிவரும்", "மேகமாய் வந்து போகிறேன்", "தொடு தொடு எனவே", "இருபது கோடி நிலவுகள் கூடி" இந்த பாடல்கள் அனைத்தும் மெல்லிசையாய் மனதை தாலாட்டும். "காக்கை சிறகினிலே நந்தலாலா" பாடல் மனதை பிசையும்.
திரைப்படத்தின் முன் பாதி காமெடியில் கலகலக்கும். பின் பாதியில் கண்கலங்க வைக்கும் காட்சிகள் நிறைந்திருக்கும். கட்டாயம் பார்க்க வேண்டிய இன்றும் ரசிக்க கூடிய ஒரு எவர்கீரின் காதல் காவியம் என்றும் சொல்லலாம்.