இரண்டு பிள்ளைகள், மூன்று பெண்கள் எனப் பெற்றிருந்தாலும் நிரந்தரமாக யார் வீட்டிலும் தங்க முடியாமல் இங்கேயும் அங்கேயும் அல்லாட வேண்டியிருக்கிறதே என்று சாமிநாதனும், சரஸ்வதியும் நொந்து கொண்டார்கள். முந்நூற்று அறுபத்தைந்து நாட்களை ஐந்தால் வகுத்து ஆளுக்கு எழுபத்தைந்து நாட்களென ஒதுக்கி, இந்த தள்ளாத வயதில் காலம்தள்ள முடியாமல் தங்கள் நிலைமையுள்ளதில் வருத்தம்தான்.
“சரி... மணி ஒண்பதாச்சு... ஆட்டோகாரனுக்கு போன் பண்ணி வரச் சொல்லுங்க... சரியா பத்துமணிக்கு மைலாப்பூர் போய் சேரணும். வழியிலே டிராபிஃக்லே மாட்டிக்காம இருக்கணும்’ என சரஸ்வதி சுவாமிநாதனை விரட்டினாள்.
“மைலாப்பூர் சங்கர் வீட்டிலேருந்து திருவான்மியூருக்கு பஸ்ஸிலேயே போயிடலாமோனோ? நேத்தியே ஆட்டோகாரன் நூறு ரூபாய் கேட்டான்’ என்றார் சுவாமிநாதன்.
“பேசாம ஐம்பது ரூபா டிக்கெட்டை வாங்குகன்னா கேட்க மாட்டீங்கறீங்க... இரண்டு மணிலேர்ந்து நாலு வரைக்கும் வேளச்சேரியிலே உமா வீட்டுக்கு போயிட்டு அங்கேர்ந்து கிளம்பி மேடவாக்கம் போயிட்டு திரும்பி சைதாபேட்டை வரணும்.’
“நீ சொல்றதும் சரிதான். தினமும் நூறு ரூபாயோட போகும். இப்படி ரெண்டு மணிநேரம் கரண்ட் கட் பண்றானேன்னு கஷ்டமா இருந்தாலும் ஒவ்வொரு ஏரியாவிலேயும் வெவ்வேறு டைம்லே கட் பண்றாங்களேன்னு சந்தோஷப்பட வேண்டியதா இருக்கு. பெத்தது ஒவ்வொண்ணும் வெவ்வேற ஏரியாவிலே இருக்கறதாலே எந்த டீ.வி. சீரியலையும் விடாம பார்க்க நமக்கு சௌகர்யமிபருக்கே, அதைச் சொல்லு’ என்றபடி ஆட்டோவைக் கூப்பிட ஃபோனை எடுத்தார் சுவாமிநாதன்.