வரைந்து முடித்துவிட்டுத்தான்
கட்டவேண்டுமென நினைத்தேன்
வரையத்துவங்கியபோது
கரைகள் மட்டுமே வெளித்தெரிகின்றன....
கட்டங்களாய் தீட்டிய
கட்டிடத்தில் கண்ணாடி என்றறிய
ஆங்காங்கே கீறல்கள்
தரவேண்டியிருந்தது...
சட்டங்களை அமைத்தேன்
மூலைகளை மளுங்கியபடியாய் ஆக்கினேன்
கூரைகள் வரைந்திருந்ததில்
இன்னும் எனக்கு திருப்தியில்லை
சுவர்கள் வைத்தபின்
கூரையை விரிக்கலாம் என்றுள்ளேன்...
பனித்துளிகளும் மழைத்துளிகளும்
நனைத்துவிடுவதில்லை எனினும்
நரைத்துவிடச்செய்யலாம்
வழுக்க வீழும்படியான
கண்ணாடி வேண்டும் சில
பிம்பங்கள் நிலைத்திருக்கும்படியான
கண்ணாடியும் வேண்டும்...
கட்டி முடிக்கப்பட்ட கண்ணாடி
மாளிகையில் என் கை ரேகைகள்
நகக்கீரல்களாய் ஆங்காங்கே
பதிவதை ரசித்தது என் சுயம்
ஆனந்தம் கொண்டு மகிழ்ந்ததில்
எல்லா சுவர்களும் என் கை ரேகைகளை
சுமந்துகொண்டிருந்தன...
ஏதுமற்ற கண்ணாடி மாளிகையின்
சுவர்களை சுரண்டிப்பார்த்தன
பல்லாயிரம் விரல்கள் - என் சுயம்
சுமந்த கர்வ ரேகைகள் அழிக்கவியலா
நகக்கீரல்களால் ஆட்பட்டிருந்தன..
கூரையின் மேல் விழுந்த
எச்சங்கள் என் சுயம் மகிழ்ந்த
ரேகைகளை விட அழகாய் தெரிந்தது- என்
கண்ணாடி மாளிகை அழுக்குகளின்
அழகால் ஜொலித்துக்கொண்டிருக்க
என் சுயம் நகக்கீரல்களை
எண்ணிக்கொண்டிருந்தது