ஒரு வணிகன் கடற்கரையோர நகரங்களுக்குச் சென்று வணிகம் செய்து வந்தான். இதனால்
படகு ஒன்றில் எப்பொழுதும் அவன் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
ஒருமுறை அவனைச் சந்தித்த நண்பன் ஒருவன், "படகிலேயே பயணம் செய்கிறாயே, உனக்கு
நீச்சல் தெரியுமா?" என்று கேட்டான்.
"தெரியாது" என்றான் அவன்.
"நீச்சல் தெரியாமல் இருப்பது ஆபத்து ஆயிற்றே. எனக்குத் தெரிந்த ஒருவர் மூன்றே
நாட்களில் நீச்சல் கற்றுத் தந்துவிடுவார். நீயும் கற்றுக் கொள்ளலாமே?" என்றான்
நண்பன்.
"எனக்கு நேரம் பணமாயிற்றே. நீச்சல் கற்றுக் கொள்வதற்காக என்னால் மூன்று நாட்களை
எல்லாம் வீணாக்க முடியாது."
"அப்படியானால் எபொழுதும் படகில் இரண்டு காலிப் பீப்பாய்களை வைத்திரு. படகு
கடலில் மூழ்கும் போது அந்தப் பீப்பாய்கள் மிதந்து உன்னைக் காப்பாற்றும்."
நண்பனின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட அவன் படகில் இரண்டு காலி பீப்பாய்களை ஏற்றி
வைத்துக் கொண்டான்.
ஒருநாள் அவன் படகு புயலில் சிக்கிக் கடலில் மூழ்கத் தொடங்கியது.
தப்பிக்க வழியில்லை. அவன் இரண்டு காலிபீப்பாய்களையும் ஒன்றாகச் சேர்த்துக்
கட்டினான். அதன் மேல் படுத்துக் கொண்டான்.
"நடப்பது நடக்கட்டும். உயிர் பிழைக்க வாய்ப்பு இருந்தால் அலைகள் என்னைக் கரையில்
சேர்க்கட்டும்" என்று நினைத்தான்.
திடீரென்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
"இந்தப் பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன. விலையுயர்ந்த பொருட்களைக் காலியாக
இருக்கும் பீப்பாய்க்குள் வைத்துவிட்டால் தான் பிழைக்கும் போது பயன்படுமே" என்று
நினைத்தான்.
விரைந்து செயல்பட்ட அவன் பீப்பாய்க்குள் அனைத்துப் பொருட்களையும் அடைத்தான்.
பீப்பாய்களின் எடை மிகவும் கூடியது.
படகு மூழ்கும்போது அவனுடன் சேர்ந்து பீப்பாய்களும் மூழ்கியது.
அதிகமான ஆசை அவனைக் கடலில் மூழ்கடித்தது.