பெங்களூர்:உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. சுமார் 6.3 கோடி இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளில் சர்க்கரை நோய் தாக்கம் குறித்து சர்வதேச நீரிழவுநோய் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் மொத்தம் 6.3 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இந்தியாவில் 5 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 2011ம் ஆண்டு 6.1 கோடியாக அதிகரித்தது. 2012ம் ஆண்டில் 6.3 கோடியாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவுக்கு சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்த அடிப்படையில் 2013ம் ஆண்டில் சுமார் 7 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கம், விரைவு உணவு, சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, நோய் பற்றிய விழிப்புணர்வு இன்மை ஆகியன இந்த நோய் பெருக்கத்துக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. 2011ம் ஆண்டு மட்டும் சர்க்கரை நோய் காரணமாக 9.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2012ம் ஆண்டு 10.1 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பாதி பேர் 60 வயதுக்கு குறைவானர்கள் என்பது அதிர்ச்சியான விஷயமாகும்.