தலையிலும் முகத்திலும் நீங்கள் எண்ணெயைப் பூசிக் கொண்டால் இந்தப் பிரச்னை சரியாகிவிட வாய்ப்பிருக்கிறது. அது எப்படிச் சாத்தியம்? தோலின் மென்மையையும் சீதோஷ்ண சகிப்புத் தன்மையையும் பாதுகாப்பதற்காக தோலின் அடியே பரந்து நிற்கும் வியர்வைக் கோளங்களும் கொழுப்புப் பைகளும் உங்கள் விஷயத்தில் அதிகமாக இயங்குகின்றன.
அதற்குக் காரணம் முகத்தில் எண்ணெய் தடவாமலிருப்பதால், வெயிலின் தாக்கத்தால் முகத்திலுள்ள தோல் வரண்டுவிடும்போது இயற்கையாகவே தோலின் உள்ளிருக்கும் கொழுப்புப் பைகளின் சேமிப்பு நிதியிலிருந்து வியர்வையுடன் வெளியேறி தோல் வறட்சியைக் குறைத்துத் தோலின் மென்மையையும் பளபளப்பையும் பாதுகாக்கிறது.
இந்தநிலை தொடர்ந்து கொண்டேயிருந்தால் சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும் கதைபோல, உங்களுடைய சேமிப்பு நிதி குறைந்துவிட்டால் தோல் இளைத்துப் புஷ்டி குறைந்து பளபளப்பின்றி மாறிவிடும். சூடும், தூசியும், டீசல் புகையும் நிறைந்த சென்னையில் முகத்தில் தோல் வறட்சியின் பாதிப்பு நிச்சயம் அதிகமாக இருக்கும். அதுவும் இருசக்கர வாகனத்தில், தலைக் கவசம் அணிந்து முகத்தை மூடும் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு நீங்கள் பயணிக்கக் கூடியவராக இருந்தால், இந்தத் தாக்கம் மேலும் கூடும்.
வெளிப்புற மாறுதல்களைப் புரிந்து கொள்ளும் சக்தியைத் தோல் இயற்கையாகவே பெற்றிருப்பதால் வறட்சியைப் போக்க, தோலுக்கு எண்ணெய்க் கொழுப்பை அனுப்புவதால் உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறது.
சரி, முகத்திலும் தலையிலும் எண்ணெய் பூசிக் கொண்டால் இந்தப் பிரச்னை எப்படித் தீரும்? காலையில் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக, தலையிலும் முகத்திலும் தேங்காய் எண்ணெய் பூசிக் கொள்ளவும். குளிக்கும்போது எண்ணெய்ப் பிசுக்கை அகற்ற, பச்சைப் பயறு, காய்ந்த எலுமிச்சம்பழத் தோல், வெந்தயம் ஆகியவற்றை 4:2:1 என்கிற விகிதத்தில் அரைத்து வைத்துக் கொண்டு, அரிசி வடித்த கஞ்சி அல்லது தயிரின் மேல் நிற்கும் தண்ணீருடன் கலந்து தேய்த்துக் கொள்ளவும். இதனால் ஏற்படும் நன்மை என்ன?
*தோலின் நெய்ப்பு போதிய அளவு கூடி, தோல் ஊட்டம் பெறும்.
*தோலின் உட்புறக் கொழுப்புச் சேமிப்பைச் செலவு செய்யாமல் பாதுகாக்கலாம்.
*கொழுப்பின் உட்புறச் சேமிப்பினால், பைகளுக்கு தேய்மானமில்லாததால் தோல் மென்மையுடன் பளபளப்புடன் காணும்.
*நெய்ப்பு தோலின் மேலேயே கிடைப்பதால், அது தோலுடன் ஒத்து நிற்கும்.
*தோலுக்குச் சூட்டைத் தாங்கும் வலிமை, எண்ணெய் தடவுவதால் அதிகமாகும்.
*வெயிலின் தாக்குதலால் முகத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது.
ஒரு சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள் உங்களுக்கு மேலும் உதவக் கூடும். சதுக்ஷீரி (நால்பாமராதி) தைலம், தூர்வாதி தைலம், ஏலாதிகேர தைலம் போன்றவை தோலின் தாங்கும் திறனை அதிகப்படுத்துபவை. பொதுவாக நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் முதலானவற்றையும் தினம் முகத்தில் தேய்த்துக் குளித்து வருவது நல்லது.
இத்தனை செய்தும் முகத்திலிருந்து உங்களுக்கு எண்ணெய் வடிந்து கொண்டிருந்தால், மூலிகைச் சூரணமாகிய ஏலாதி சூரணத்தை, தயிர்த் தெளிவுடன் கலந்து முகத்தில் பூசி, சுமார் 10 நிமிடங்கள் வரை ஊறிய பிறகு, குளிர்ந்த நீரில் அலம்பிவிடவும்.