புண்ணியங்கள் கோடி கண்டு
வாழ்ந்த மண் அன்று
பாவங்கள் வெள்ளமாய் ஓட
பரிதவிக்கிறது இன்று
புன்முறுவல் பூத்த மக்கள்
வன்முறைகளை சூடிய
காலம் இது...
பூவாடை சுவாசித்த உலகம்
இரத்த வாடை உள்ளிழுக்கும்
காலம் இது...
எட்டுத்திக்கும் கேட்கிறது
சொல்லிற்கெட்டா கோரங்கள்
அஃறிணையும் கண்டு அழுகிறது
தாங்க முடியா அவலங்கள்
உண்மையின் உச்சமாய்
இருந்த வையகம்
பொய்யிலே தத்தளித்து
பாழாய் போகிறதே!
சட்டத்தின் முன்னால்
அராஜகம் கூத்தாடுகிறதே
நீதி தேவதையும்
வேதனை தாங்காது
நிரந்தரமாய் கண்கட்டப்பட்டு விட்டாளோ...
முன்பெல்லாம் உண்மையை படம் போட்டு
காட்டிய ஊடகங்கள்
இன்று பணத்தை விழுங்கி
பொய்மைக்கு அரியாசனமிடும்
கலியுகம் பிறந்ததோ!
நிரபராதியின் கழுத்தில்
தூக்குக் கயிறு
குற்றவாளியின் கழுத்தில்
பொன்மலர் மாலை
நிகழ்கால ஊடகம் பொய்யறியாது
என போற்றும் மக்களே!
நாம் அனைவரும்
மூடர் கூட்ட வர்க்கமே!
உயிரைக் குடிப்பவன்
நற்பிரஜையாம்
உயிருக்காய் அஞ்சினவன்
தேசத் துரோகியாம்
வெறிகொண்டு எழும்புவீர்!
நிஜத்தை புதைக்கும்
ஊடகங்களின் ஜாலத்தில்
மூழ்கி போகாதீர்...!
ஆட்டமும் பாட்டமும்
வக்கனையாய் காட்டவே
ஊடகங்கள் உண்டு இன்று...
ஊடகப் போலிகளை கண்டு
நியாயத்தின் மீது
கறை பூசாதிருப்பதே நன்று...
தனிமனிதனாய்
தலை நிமிர்வோம்
புரட்சி செய்து நீதியை
வாழவைப்போம்!
நம் கைகள் கோர்த்தால் போதும்
ஊடக ஒளியில் மறைந்த நீதி,
நம் கண்களின் வெளிச்சத்தில்
சிகரம் தொடும்...!