Author Topic: ~ புறநானூறு ~  (Read 75807 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #240 on: March 22, 2014, 04:46:14 PM »
புறநானூறு, 241. (விசும்பும் ஆர்த்தது!)
பாடியவர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
போர்ப்புறு முரசும் கறங்க
ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே

அருஞ்சொற்பொருள்:-

திண் = செறிந்த, வலிய
தண் =குளிர்ந்த
தார் = மாலை
ஒண் = ஒளி பொருந்திய
தொடி = வளையல்
வச்சிரம் = இந்திரனின் படைக்கருவி
தடக்கை = பெரிய கை
நெடியோன் = இந்திரன்
போர்ப்பு = போர்த்தல்
கறங்கல் = ஒலித்தல்
ஆர்த்தல் = ஒலித்தல்
விசும்பு = ஆகாயம்

இதன் பொருள்:-

வலிய தேர்களை இரவலர்க்கு அளித்த, குளிர்ந்த மாலையணிந்த ஆய் அண்டிரன் வருகிறான் என்று, ஒளி பொருந்திய வளையல்களையும், வச்சிரம் என்னும் ஆயுதத்தையும், பெரிய கையையும் உடைய இந்திரனின் கோயிலில், போர்த்தப்பட்ட முரசுகள் முழங்கப்பட்டன. அந்த ஒலி வானத்தில் ஒலித்தது.

பாடலின் பின்னணி:-

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரனுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருந்தார். இவர், புறநானூற்றில் 12 பாடல்களில் ஆய் அண்டிரனைப் பாடியுள்ளார். ஆய் அண்டிரன் இறந்ததையும் அவனுடன் அவன் மனைவியரும் இறந்ததையும் கண்ட இவர், ஆய் அண்டிரன் மறு உலகம் அடைந்ததாகவும் அங்கு இந்திரன் அவனை வரவேற்பதாகவும் குறிப்பிடுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #241 on: March 22, 2014, 04:50:09 PM »
புறநானூறு, 242. (முல்லையும் பூத்தியோ?)
பாடியவர்: குடவாயில் கீரத்தனார்.
பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

அருஞ்சொற்பொருள்:-

மருப்பு = யாழின் தண்டு
கடந்த = வென்ற
மாய்ந்த = இறந்த
பின்றை = பிறகு

இதன் பொருள்:-

முல்லையே! தன்னுடைய வீரம் வெளிப்படுமாறு பகைவர்களின் வீரர்களைக் கொன்ற, வலிய வேலையுடைய சாத்தன் இறந்த பிறகு, ஒல்லையூர் நாட்டில் பூத்தாயோ? இனி, இளைய ஆடவர்கள் உன் பூக்களைச் சூடிக்கொள்ள மாட்டார்கள்; வளையல் அணிந்த மகளிரும் உன் பூக்களைப் பறிக்க மாட்டார்கள்; நல்ல யாழின் தண்டால் மெதுவாக வளைத்துப் பறித்து உன் பூக்களைப் பாணனும் சூடமாட்டன்; பாடினியும் சூடமாட்டாள்.

பாடலின் பின்னணி:-

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இறந்ததைக் கண்ட புலவர் குடவாயில் கீரத்தனார் மிகவும் வருந்தினார். தம் வருத்தத்தை வெளிப்படுத்தும் வகையில், ஒரு முல்லைக் கொடியைப் பார்த்து, “ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இறந்ததால், அனைவரும் பெருந்துயரத்தில் உள்ளனர். இந்நேரத்தில் நீ பூத்திருக்கிறாயே? யார் உன் பூக்களைச் சூடப் போகிறார்கள்?” என்று இப்பாடலில் புலவர் குடவாயில் கீரத்தனார் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

”இயற்கையைப் பார்த்து கவிஞர் கேட்கும் இக்கேள்வி சாத்தன் பால் அவன் ஊர் மக்களும் அவன் புரந்த பாணரும் பாடினியரும் கவிஞரும் கொண்டிருந்த பேரன்பையும் அவன் ஊராரிடம் பெற்றிருந்த புகழையும் ஆறு வரிகளில் எடுத்துக்காட்டும் இச்சிறு பாடல் ஒரு பெருங்காவியம் செய்யும் வேலையைச் செய்துவிடுகிறது” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடைய அறிஞர் ப. மருதநாயகம், “புதுப்பார்வைகளில் புறநானூறு” என்ற தம்முடைய நூலில் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #242 on: March 22, 2014, 04:52:33 PM »
புறநானூறு, 243. (யாண்டு உண்டுகொல்?)
பாடியவர்: தொடித்தலை விழுத்தண்டினார்.
பாடப்பட்டோன்: ஆய்வுக்குரியது.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி
மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு

உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்
கரையவர் மருளத், திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை

அளிதோ தானே, யாண்டுண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே

அருஞ்சொற்பொருள்:-

இனி = இப்பொழுது
திணிதல் = செறிதல்
பாவை = பொம்மை
தைஇ = சூடி
கயம் = குளம்
பிணைந்து= கோத்து
தழீஇ = தழுவி
தூங்கல் = ஆடல்
ஆயம் = கூட்டம்
சினை = கிளை
பிதிர் = திவலை (சிதறும் நீர்த்துளி)
குட்டம் = ஆழம்
விழு = சிறந்த
தண்டு = தடி, ஊன்றுகோல்
இரும் = இருமல்
மிடைதல் = கலத்தல்

இதன் பொருள்:-

இனிநினைந்து=====> ஆயமொடு

இப்பொழுது நினைத்தால் வருந்தத்தக்கதாக உள்ளது. மணலைத் திரட்டிச் செய்த பொம்மைக்கு, பறித்த பூவைச் சூடி, குளிர்ந்த குளத்தில் விளையாடும் பெண்களோடு கை கோத்து, அவர்கள் தழுவும் பொழுது தழுவி, அவர்கள் ஆடும் பொழுது ஆடி, ஒளிவு மறைவு இல்லாமல் வஞ்சனை இல்லாத இளையோர் கூட்டத்தோடு விளையாடினோம்.

உயர்சினை=====> இளமை

உயர்ந்த கிளைகளையுடைய மருதமரத்தின் நீர்த்துறையில் படிந்த கிளையைப் பற்றி ஏறி, அழகு மிகுந்த, கரைகளில் உள்ளோர் வியக்க, நீரலைகளிலிருந்து நீர்த்துளிகள் மேலே எழவும், நெடிய நீரையுடைய ஆழமான இடத்தில், “துடும்” எனக் குதித்து, மூழ்கி, மணலை வெளியில் கொண்டுவந்து காட்டிய அறியாமை மிகுந்த இளமை

அளிதோ=====> எமக்கே

இப்பொழுது எங்குள்ளதோ? பூண் சூட்டிய நுனியையுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து, இருமல்களுக்கு இடைஇடையே வந்த சில சொற்களைக் கூறும் பெரிய முதியவர்களாகிய எம்முடைய இந்த நிலை இரங்கத் தக்கது.

பாடலின் பின்னணி:-

தம் இளமையில் தாம் விளையாடிய விளையாட்டுகளையும், இன்பமான நிகழ்ச்சிகளையும் எண்ணிப் பார்த்து, அவையெல்லாம் கழிந்தனவே என்று தாம் வருந்துவதை, புலவர் தொடித்தலை விழுத்தண்டினார் இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

தன் இளமை கழிந்துபோனதை நினைத்துப் புலவர் தம் வருத்தத்தை வெளிப்படுத்துவதால், இப்பாடல் கையறுநிலையைச் சார்ந்ததாயிற்று.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #243 on: March 22, 2014, 04:56:45 PM »


புறநானூறு, 244. (வண்டு ஊதா; தொடியிற் பொலியா!)
பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பட்டோன்: தெரியவில்லை.
திணை: தெரியவில்லை.
துறை: தெரியவில்லை.
================================

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா;
விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா;
இரவல் மாக்களும் .. .. .. .. .. .. .. .

அருஞ்சொற்பொருள்:-

சென்னி = தலை
தொடி = வலையல்
பொலிவுல் = அழகு

இதன் பொருள்:-

பாணர்களின் தலைகளில் உள்ள பூக்களிலிருந்து ஒழுகும் தேனைப் பருகுவதற்காக வண்டுகள் அங்கு சென்று ஒலிப்பது நின்றது. விறலியரின் முன்கைகளில் வளையல்கள் அழகு செய்யவில்லை. இரவலர்களும் …..

பாடலின் பின்னணி:-

இப்பாடலில் முதல் இரண்டு வரிகளும் மூன்றாவது வரியில் இரண்டு சொற்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பகுதியை ஆய்ந்து பார்த்தால், யாரோ ஒரு புலவர், கையறு நிலையில் தாம் பெற்ற துயரத்தை வெளிப்படுத்துவது போல் தோன்றுகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #244 on: March 22, 2014, 04:58:52 PM »
புறநானூறு, 245. (என்னிதன் பண்பே?)
பாடியவர்: சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: கையறு நிலை.
================================

யாங்குப்பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே

அருஞ்சொற்பொருள்:-

யாங்கு = எவ்வளவு, எவ்வாறு
எனைத்து = எவ்வளவு
செகுத்தல் = அழித்தல்
மதுகை = வலிமை
களரி = களர் நிலம்
பறந்தலை = பாழிடம்
பொத்துதல் = தீ மூட்டுதல், மூடுதல்
ஈமம் = பிணத்தை எரிப்பதற்கு விறகு அடுக்கப்பட்ட படுக்கை
அழல் = தீக்கொழுந்து
பாயல் = உறங்குதல்
ஞாங்கர் = இடம் (மேலுலகம்)

இதன் பொருள்:-

காதலியைப் பிரிவதால் நான் உறும் துன்பம் எவ்வளவு பெரியதாயினும், அது என் உயிரை அழிக்கும் வலிமை இல்லாததால், அத்துன்பம் அவ்வளவு வலிமை உடையதன்று. கள்ளிச்செடிகள் வளர்ந்த களர் நிலமாகிய பாழிடத்தில், வெட்ட வெளியில், தீயை விளைவிக்கும் விறகுகளால் அடுக்கபட்ட, ஈமத் தீயின் ஒளிபொருந்திய படுக்கையில் படுக்கவைக்கப்பட்ட என் மனைவி மேலுலகம் சென்றாள். ஆனால், நான் இன்னும் வாழ்கின்றேனே! இந்த உலகத்தின் இயற்கைதான் என்ன?

பாடலின் பின்னணி:-

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் மனைவி இறந்தாள். அவள் உடல் ஈமத்தீயில் வைத்து எரிக்கப்பட்டது. அவள் உடல் தீக்கிரையாகியதைத் தன் கண்ணால் கண்ட மாக்கோதை, தாங்க முடியாத துயரம் அடைந்தான். அந்நிலையில், “காதலியின் பிரிவால் அடையும் துன்பம் எவ்வளவு பெரிதாகத் தோன்றினாலும் அது அத்துணை வலியது அன்று. என் மனைவியின் உடல் தீயில் எரிந்ததை நான் கண்ணால் கண்ட பிறகும் இன்னும் உயிரோடு உள்ளேனே.” என்று மாக்கோதை புலம்புவதை இப்பாடலில் காண்கிறோம்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #245 on: March 22, 2014, 05:01:04 PM »
புறநானூறு, 246. (பொய்கையும் தீயும் ஒன்றே!)
பாடியவர்: பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: ஆனந்தப்பையுள். கணவன் இறந்த போது மனைவி துன்புறுதலைக் கூறுதல் அல்லது இறந்தாரைக் கண்டு சுற்றத்தார் வருந்துதல் ஆகிய இரண்டும் ஆனந்தப்பையுள் என்ற துறையில் அடங்கும்.
==================================

பல்சான் றீரே! பல்சான் றீரே!
செல்கெனச் சொல்லாது, ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட
காழ்போல் நல்விளர் நறுநெய் தீண்டாது

அடைஇடைக் கிடந்த கைபிழி பிண்டம்
வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;

பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்குஅரிது ஆகுக தில்ல; எமக்குஎம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்புஅற
வள்இதழ் அவிழ்ந்த தாமரை
நள்இரும் பொய்கையும் தீயும்ஓர் அற்றே!

அருஞ்சொற்பொருள்:-

சூழ்ச்சி = ஆராய்ச்சி
கொடுங்காய் = வளைந்த காய்
போழ்ந்து = வெட்டி
காழ் = விதை
விளர் = வெண்ணிறம்
அடையிடை = பானையின் அடிப் பக்கத்தில்
பிண்டம் = சோற்ற உருண்டை
சாந்து = துவையல்
அட்ட = சமைத்த
வேளை = வேளைக் கீரை
வெந்தை = நீராவியில் வேகவைக்கட்டது
வல்சி = சோறு
பரல் = சிறிய கல்
வதிதல் = தூங்குதல்
உயவல் = வருத்தம்
மாதோ – அசைச் சொல்
பெருங்காடு = சுடுகாடு
கோடு = மரக் கொம்பு (விறகு)
தில்ல – விழைவின் கண் கூறப்பட்டது
நள் = செறிந்த

இதன் பொருள்:-

பல்சான் றீரே=====> தீண்டாது

பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! பல குணங்களும் நிறைந்த பெரியோர்களே! ”உன் கணவனோடு நீ இறந்து போ” என்று கூறாது, நான் என் கணவரோடு ஈமத்தீயில் மூழ்கி இறப்பதைத் தவிர்க என்று கூறும் தீய வழிகளில் சிந்திக்கும் பெரியோர்களே! அணில்களின் மேலுள்ளது போன்ற வரிகளையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்தால் தோன்றும் விதைகளைப் போன்ற, வெள்ளை நிறமான, மணமுள்ள, நெய் கலவாத,

அடைஇடை=====> மாதோ

பானையின் அடிப்பகுதியில் நீருடன் கலந்த சோற்றைப் பிழிந்தெடுத்து, அத்துடன் வெள்ளை நிறமுள்ள எள்ளை அரைத்து ஆக்கிய துவையலுடன், புளியிட்டுச் சமைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு, சிறிய கற்களால் ஆன படுக்கையில் பாயில்லாமல் படுத்து வருந்தும் கைம்பெண்களில் நான் ஒருத்தி அல்லள்

பெருங்காட்டு=====> அற்றே

சுடுகாட்டில் கரிய கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்குத் தாங்க முடியாதாதாக இருக்கலாம்; எனக்கு, பெரிய தோள்களையுடைய என் கணவர் இறந்ததால், அந்த ஈமத் தீயிலுள்ள பிணப்படுக்கையும் அரும்புகளே இல்லாமல், மலர்ந்த தாமரைகளை மட்டுமே உடைய நீர் செறிந்த பெரிய குளமும் ஒரே தன்மையது.

பாடலின் பின்னணி:-

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இறந்தவுடன் அவன் உடல் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. அவன் மனைவி, பெருங்கோப்பெண்டு, தானும் அந்த ஈமத்தீயில் மூழ்கி இறக்கத் துணிந்தாள். அங்கிருந்த சான்றோர் பலரும் அவளைத் தீயில் விழுந்து இறக்காமல் வாழுமாறு அறிவுரை கூறினார்கள். ஆனால், அவள் தன் கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வதைவிட இறப்பதையே தான் விரும்புவதாக இப்பாடலில் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #246 on: March 22, 2014, 07:01:06 PM »
புறநானூறு, 247. (பேரஞர்க் கண்ணள்!)
பாடியவர்: மதுரைப் பேராலவாயர்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: ஆனந்தப்பையுள்.
==================================

யானை தந்த முளிமர விறகின்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்

பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரும் அம்ம தானேதன் கொழுநன்
முழவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமியள் ஆயினும்
இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே

அருஞ்சொற்பொருள்:-

முளித்தல் = காய்தல்
முளிமரம் = காய்ந்த மரம்
கானவர் = வேடர்
பொத்துதல் = தீ மூட்டுதல்
ஞெலிதல் = கடைதல்
ஞெலி தீ = கடைந்த தீ
விளக்கம் = ஒளி
வைகல் = தங்கல்
எடுப்பி = எழுப்பி
முன்றில் = முற்றம்
சீக்கல் = கீறிக் கிளறுதல்
அஞர் = வருத்தம்
பேரஞர் = பெரும் வருத்தம்
தெருமரல் = மனச் சுழற்சி
அம்ம – அசைச் சொல்
கடி = காவல்
வியன் = அகலம்
சிறுநனி = சிறிது நேரம்
தமியள் = தனித்திருப்பவள்
புறங்கொடுத்தல் = போகவிடுதல்

இதன் பொருள்:-

யானை=====> தாழ

பெண் தெய்வத்தின் கோயில் முற்றத்தில், யானைகொண்டுவந்து தந்த, காய்ந்த விறகால் வேடர்கள் மூட்டிய தீயின் ஒளியில் மடப்பம் பொருந்திய மான்களின் கூட்டம் தங்கி உறங்கிக்கொண்டிருந்தது. அங்கு குரங்குகள் தீயைக் கிளறி ஆர்ப்பரித்து அந்த மான்களை உறக்கத்திலிருந்து எழுப்பின. ஓயாது முரசு ஒலிக்கும், காவலுடைய பெரிய அரண்மனையிலிருந்து சிறுபொழுது தன் கணவனைவிட்டுப் பிரிந்து தனித்திருந்தாலும் உயிர் நடுங்கும் பெருங்கோப்பெண்டு, இப்பொழுது நீர் வடியும் தழைத்த கூந்தல் முதுகில் தாழ,

பேரஞர்=====> கொடுத்தே

தனியாளாக, துயரம் மிகுந்த கண்களோடு, பெண் தெய்வத்தின் கோயிலின் முற்றத்திலிருந்து, சுடுகாட்டில் மூட்டப்பட்ட தீயை நோக்கி மனத் துயரத்தோடு, தன் இளமையைத் துறந்து பெருங்கோப்பெண்டு சென்றாள்.

பாடலின் பின்னணி:-

பெருங்கோப்பெண்டு தன் கணவனுடைய ஈமத்தீயில் வீழ்ந்து உயிர் துறந்ததைக் கண்ட பேராலவாயர், தம் வருத்தத்தை இப்பாடலில் தெரிவிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

“முழவுகண் துயிலா” என்பது “ஓயாது ஒலிக்கும் முரசு” என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #247 on: March 22, 2014, 07:02:20 PM »
புறநானூறு, 248. (அளிய தாமே ஆம்பல்!)
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: தாபத நிலை. கணவன் இறந்ததால் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டிருத்தலை உரைத்தல்.
==================================

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்,
இளையம் ஆகத் தழையா யினவே, இனியே,
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படுஉம் புல் ஆயினவே

அருஞ்சொற்பொருள்:-

ஆம்பல் = அல்லிப் பூ
இளையம் = சிறு வயதில்
பொழுது மறுத்து = கலம் கடந்து
இன்னாமை = துன்பம்
வைகல் = நாள்
படூஉம் = உண்டாகும்

இதன் பொருள்:-

இந்த சிறிய வெண்ணிறமான அல்லிப் பூக்கள் இரங்கத் தக்கன. சிறுவயதில் இந்த அல்லியின் இலைகள் எனக்கு உடையாக உதவின. இப்பொழுது, பெரிய செல்வமுடைய என் கணவன் இறந்ததால், உண்ணும் நேரத்தில் உண்ணாமல், காலம் தாழ்த்தித், துன்பத்தோடு, நாளும் உண்ணும் புல்லரிசியாக இந்த அல்லி பயன்படுகின்றது.

பாடலின் பின்னணி:-

தன் கணவனை இழந்த பெண் ஒருத்தி, கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்ந்தாள். அவள் தன் நிலைமையைக் நினைத்து வருந்துவதை இப்பாடலில் காண்கிறோம்.

சிறப்புக் குறிப்பு:-

இளம்பெண்கள் அல்லிப்பூவால் தொடுக்கப்பட்ட தழையுடையை அணிந்து தம்மை அழகு செய்வதுகொள்வது பழங்காலத்தில் வழக்கிலிருந்தது என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #248 on: March 22, 2014, 07:03:47 PM »
புறநானூறு, 249. (சுளகிற் சீறிடம்!)
பாடியவர்: தும்பைச் சொகினனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: தாபத நிலை.
==================================

கதிர்மூக்கு ஆரல் கீழ்ச்சேற்று ஒளிப்பக்,
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ,
எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்
பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு

உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்,
அகல்நாட்டு அண்ணல் புகாவே, நெருநைப்
பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி,
ஒருவழிப் பட்டன்று மன்னே; இன்றே,
அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை

உயர்நிலை உலகம் அவன்புக வார
நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி
அழுதல் ஆனாக் கண்ணள்
மெழுகு ஆப்பிகண் கலுழ்நீ ரானே

அருஞ்சொற்பொருள்:-

கதிர் மூக்கு = கூர்மையான மூக்கு
ஆரல் = ஒரு வகை மீன்
ஒளிப்ப = மறைய
கணை = திரண்ட
கோடு - இங்கு, வாளை மீனின் மீசையைக் குறிக்கிறது
எரிப்பூ = நெருப்பைப் போல் சிவந்த செந்தாமரை
பூ = தாமரை
பழனம்= பொய்கை (குளம்)
நெரித்து = நெருங்கி
வலைஞர் = நெய்தல் நில மக்கள்
அரிக்குரல் = மெல்லிய ஒலி
தடாரி = சிறுபறை
யாமை = ஆமை
நுகும்பு = குருத்து
சினை = கரு
வரால் = ஒரு வகை மீன்
உறழ்தல் = எதிரிடுதல்
கயல் = கெண்டை மீன்
முகத்தல் = மொள்ளல்
புகா = உணவு
நெருநை = நேற்றை
பகல் = ஒளி
கண்ணி = கருதி, குறித்து, பொருந்தி
ஒருவழிப்படுதல் = ஒற்றுமைப் படுதல்
மன்னே – கழிந்தது என்ற இரங்கற் பொருளில் கூறப்பட்டது
ஆய் = அழகு
நுதல் = நெற்றி
புகவு = உணவு
நீறு = புழுதி
ஆடுதல் = பூசுதல்
சுளகு = முறம்
ஆனாமை = நீங்காமை
ஆப்பி = பசுவின் சாணி
கலுழ்தல் = அழுதல்

இதன் பொருள்:-

கதிர்மூக்கு=====> வராலொடு

கூர்மையான மூக்கையுடைய ஆரல் மீன் கீழேயுள்ள சேற்றில் மறைய, திரண்ட மீசையையுடைய வாளைமீன் நீர்மேல் பிறழ, நெருப்புப்போல் சிவந்த செந்தாமரை பூத்த பொய்கையை வலைஞர் அடைந்தவுடன், மெல்லிய ஓசையையுடைய தடாரி போன்ற ஆமை பிறழ, பனங்குருத்தைப் போன்ற கருமுதிர்ந்த வரால் மீன்களோடு,

உறழ்வேல்=====> மடந்தை

எதிரிடும் வேல் போன்ற கெண்டை மீன்களையும் முகந்து கொள்ளும் அகன்ற நாட்டின் தலைவன் உயிரோடு இருந்த பொழுது, ஒளி பொருந்திய இடத்தில், பலரோடு கூடி உண்டான். அது கழிந்தது. இப்பொழுது, அவன் மேலுலகம் அடைந்ததால், அழகிய நெற்றியும் கற்பும் உடைய அவன் மனைவி

உயர்நிலை=====> கலுழ்நீ ரானே

அவனுக்கு உணவு படைப்பதற்காக, புழுதி படிந்த முறமளவு உள்ள சிறிய இடத்தைத் தன்னுடைய கண்ணீரில் கலந்த பசுஞ்சாணத்தால் மெழுகுகிறாள்.

பாடலின் பின்னணி:-

பெரிய நாட்டுக்குத் தலைவனாக இருந்த ஒருவன் உயிரோடு இருந்த பொழுது, பலரோடும் கூடி உண்பவனாக இருந்தான். அவன் இறந்த பிறகு, அவன் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டாள். ஒருநாள், அவள் ஒரு சிறிய இடத்தை கண்ணிர் கலந்த சாணத்தோடு மெழுகுவதைக் கண்ட புலவர் சொகினனார் தம் வருத்தத்தை இப்படலில் வெளிப்படுத்துகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #249 on: March 22, 2014, 07:04:46 PM »
புறநானூறு, 250. (மனையும் மனைவியும்!)
பாடியவர்: தாயங் கண்ணியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: தாபத நிலை.
==================================

குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற், புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி
அல்லி உணவின் மனைவியொடு இனியே
புல்என் றனையால் வளங்கெழு திருநகர்
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே

அருஞ்சொற்பொருள்:-

குய் = தாளிப்பு
குரல் = ஒலி
மலிந்த = மிகுந்த
அடிசில் = உணவு
தடுத்த = நிறுத்திய
கொய்து = களைந்து
திருநகர் = அழகிய மாளிகை
வான் = சிறந்த
முனித்தலை = குடுமித்தலை
தனித்தலை = தனியே அமைந்த இடம்
முன்னுதல் = அடைதல்

இதன் பொருள்:-

அழகிய மாளிகையே! நன்கு தாளித்த, வளமான துவையலோடு கூடிய உணவை அளித்து இரவலர்களை வேறு எங்கும் செல்லாமல் தடுத்து நிறுத்திய வாயிலையும், தன்னிடம் ஆதரவு தேடி வந்தவர்களின் கண்ணீரைத் துடைக்கும் குளிர்ந்த நறுமணமுள்ள பந்தலையும் உடையதாக முன்பு நீ இருந்தாய். சுவையான சோற்றை உண்டு இனிய பாலை விரும்பும் குடுமித்தலையயுடைய புதல்வர்களின் தந்தை தனியிடமாகிய சுடுகாட்டை அடைந்த பின், அவன் மனைவி கூந்தலைக் களைந்து, வளையல்களை நீக்கி, அல்லி அரிசியை உணவாகக் கொள்கிறாள். இப்பொழுது நீ பொலிவிழந்து காணப்படுகிறாய்.

பாடலின் பின்னணி:-

தாயங் கண்ணியாருக்குத் தெரிந்த ஒருவன் செல்வத்தோடும் சிறப்போடும் வாழ்ந்தான். அவன் இறந்த பிறகு, அவன் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டாள். ஒருகால், தாயங் கண்ணியார், அவளைக் காணச் சென்றார். அவள் கைம்மை நோன்பை மேற்கொண்டு வருத்தத்தோடு வாழும் வாழ்க்கையைக் கண்டு மனம் நொந்து இப்பாடலை இயற்றியுள்ளார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #250 on: March 22, 2014, 07:06:46 PM »
புறநானூறு, 251. (அவனும் இவனும்!)
பாடியவர்: மாரிப்பித்தியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: தாபத வாகை.
==================================

ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிகும்;
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே

அருஞ்சொற்பொருள்:-

ஓவம் = ஓவியம்
வரைப்பு = மாளிகை
பாவை = பொம்மை
இழை = அணிகலன்
நெகிழ்ந்த = கழன்ற
மள்ளன் = இளைஞன்
கண்டிகும் = கண்டோம்
கழை = மூங்கில்
கானம் = காடு
கடுகுதல் = மிகுதல்
தெறல் = வெம்மை
வேட்டு = விரும்பி
புரிசடை = திரண்டு சுருண்ட சடை
புலர்தல் = உலர்தல்

இதன் பொருள்:-

ஓவியம் போல் அழகான இடங்களுடைய மாளிகையில், சிறிய வளயல்களை அணிந்த, பாவை போன்ற மகளிரின் அணிகலன்களை நெகிழவைத்த இளைஞனை முன்பு கண்டுள்ளோம். இப்பொழுது, மூங்கில் மிகுந்த நெடிய மலைகளிலிருந்து விழும் அருவிகளில் நீராடி, காட்டு யானைகள் கொண்டு வந்து தந்த விறகால் மூட்டிய மிகுந்த வெப்பமுள்ள தீயில், விருப்பத்துடன் தன் முதுகுவரை தாழ்ந்துள்ள திரண்டு சுருண்ட சடைமுடியை உலர்த்துபனும் அவனே.

பாடலின் பின்னணி:-

சிறப்பாக வாழ்ந்த தலைமகன் ஒருவன், துறவறம் பூண்டான். அவன் இல்வாழ்க்கையில் இருந்ததையும் தற்பொழுது துறவறம் மேற்கொண்டிருப்பதையும் நினைத்து இப்பாடலை மாரிப்பித்தியார் இயற்றியுள்ளார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #251 on: March 25, 2014, 07:48:06 PM »
புறநானூறு, 252. (அவனே இவன்!)
பாடியவர்: மாரிப்பித்தியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: தாபத வாகை.
==================================

கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம்பெயர்ந்து
தில்லை அன்ன புல்லென் சடையோடு
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே

அருஞ்சொற்பொருள்:-

கறங்கல் = ஒலித்தல்
அள்ளு = செறிவு
தாளி = ஒருவகைக் கொடி
புல் = புல்லிய, மென்மையான
மடமயில் = இளம் மயில்

இதன் பொருள்:-

ஒலிக்கும் வெண்மையான அருவியில் நீராடுவதால், பழையநிறம் மாறி தில்லைமரத் தளிர் போன்ற வெளிறிய சடையோடு கூடி நின்று, செறிந்த இலைகளுடைய தாளியைப் பறிக்கும் இவன், முன்பு இல்வாழ்க்கையில் இருந்த பொழுது இளம் மயிலை ஒத்த தன் மனைவியை வயப்படுத்தும் சொற்களலாகிய வலையையுடைய வேட்டுவனாக இருந்தான்.

பாடலின் பின்னணி:-

முந்திய பாடலில் இளைஞன் ஒருவன் துறவறம் பூண்டொழுகுவதைக் கூறிய மாரிப்பித்தியார் அவன் இல்வாழ்க்கையில் இருந்த பொழுது மகளிரை இனிய சொல்லால் காதல் மொழிபேசி வயப்படுத்தும் வேட்டுவனாய் இருந்தான் என்று இப்பாடலில் கூறுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #252 on: March 25, 2014, 07:51:14 PM »
புறநானூறு, 253. (கூறு நின் உரையே!)
பாடியவர்: குளம்பந்தாயனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: முதுபாலை. காட்டில் தன் கணவனை இழந்த மனைவியின் தனிமை நிலையைக் கூறுதல்.
==================================

என்திறத்து அவலம் கொள்ளல் இனியே;
வல்வார் கண்ணி இளையர் திளைப்ப
நாகாஅல்என வந்த மாறே, எழாநெல்
பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்
வளைஇல் வறுங்கை ஓச்சிக்
கிளையுள் ஒய்வலோ? கூறுநின் உரையே

அருஞ்சொற்பொருள்:-

திறம் = பக்கம்
திறத்து= பக்கத்து
அவலம் = வருத்தம்
வல் = வலிமை
கண்ணி = மாலை
திளைத்தல் = பொருதல் (போரிடுதல்)
நகாஅல் = மகிழேன்
மாறு = இறப்பு
கழை = மூங்கில்
பொதி = பட்டை
விளர்ப்பு = வெளுப்பு
கிளை = சுற்றம்
ஒய்தல் = செலுத்துதல், கொடுத்தல்

இதன் பொருள்:-

இனி, நீ எனக்காக வருத்தம் கொள்ள வேண்டா. வலிய வாரால் கட்டப்பட்ட மாலையணிந்த இளைஞர்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு போரிடும்பொழுது நீ அவர்களுடன் சேர்ந்து மகிழாதவாறு உனக்கு இறப்பு வந்தது. நெல் முளைக்காத பசிய மூங்கிலின் பட்டையை நீக்கியதைப்போல், வெளுத்த வளையல் நீங்கிய வெறுங்கையை தலைமேல் தூக்கி, உன் சுற்றத்தாரிடம் நீ இறந்த செய்தியைச் எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பேன்? நீயே சொல்வாயாக.

பாடலின் பின்னணி:-

தலைமகன் ஒருவன் போருக்குச் சென்று போர்க்களத்தில் இறந்து கிடந்தான். அவன் மனைவி அங்குச் சென்று புலம்புவதை இப்பாடலில் குளம்பந்தாயனார் குறிப்பிடுகிறார்.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #253 on: March 25, 2014, 07:55:09 PM »
புறநானூறு, 254. (ஆனாது புகழும் அன்னை!)
பாடியவர்: கயமனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: முதுபாலை.
==================================

இளையரும் முதியரும் வேறுபுலம் படர
எடுப்ப எழாஅய்; மார்பமண் புல்ல
இடைச்சுரத்து இறுத்த மள்ள! விளர்த்த
வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்
இன்னன் ஆயினன் இளையோன் என்று

நின்னுரை செல்லும் ஆயின், மற்று
முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே என்மகன்
வளனும் செம்மலும் எமக்கென நாளும்
ஆனாது புகழும் அன்னை
யாங்கா குவள்கொல்? அளியள் தானே

அருஞ்சொற்பொருள்:-

புலம் = இடம்
எடுப்ப = எழுப்ப, தூக்க
புல்லுதல் = தழுவுதல்
சுரம் = வழி
இறுதல் = சாதல்
மள்ளன் = வீரன்
விளர்த்த = வெளுத்த
ஓச்சி= உயர்த்தி
கிலை = சுற்றம்
இன்னன் = இத்தன்மையவன்
மற்று – அசை நிலை
பழுனிய = பழுத்த
கோளி = ஆலமரம்
புள் = பறவை
ஆர் = நிறைவு
யாணர் = புதுவருவாய்
செம்மல் = பெருமை
ஆனாது = அமையாது (குறையாது)
அளியள் = இரங்கத்தக்கவள்

இதன் பொருள்:-

இளையரும்=====> என்று

இளையவர்களும் முதியவர்களும் போர்க்களத்திலிருந்து வேறு இடங்களுக்குச் சென்றனர். நான் எழுப்பினால் நீ எழுந்திருக்கவில்லை. உனது மார்பு நிலத்தில் படுமாறு, நீ இடைவழியில் இறந்துவிட்டாய். வீரனே! வளையலை நீக்கியதால் வெளுத்த வெறுங்கையைத் தூக்கி, உன் சுற்றத்தாரிடம், நீ இறந்துவிட்டாய் என்று

நின்னுரை=====> தானே

உன்னைப் பற்றிய செய்தியை நான் எடுத்துச் சென்றால், ” என் மகனின் செல்வமும் பெருமையும், ஊரின் முன்னே உள்ள, பழுத்த ஆலமரத்தில் பறவைகள் வருவதைப் போன்றது.” என்று நாள்தோறும் விடாமல் புகழ்ந்து பேசும் உன் தாய் என்ன ஆவாளோ? அவள் இரங்கத்தக்கவள்.

பாடலின் பின்னணி:-

போர் முடிந்ததால், போருக்குச் சென்ற பலரும் வேறுவேறு இடங்களுக்குச் சென்றனர். ஒருவீரனின் மனைவி தன் கணவன் திரும்பி வராததைக்கண்டு போர்க்களத்திற்குச் சென்றாள். அங்கே, அவள் கணவன், மார்பில் அம்புபட்டு இறந்து கிடப்பதைக் கண்டாள். தன் கணவன் இறந்ததால் அவள் புலம்புகிறாள். தான் இல்லத்திற்குச் சென்று தன் கணவன் இறந்த செய்தியைத் தன் கணவனின் தாய்க்கு எங்ஙனம் தெரிவிப்பது என்று எண்ணிக் கலங்குகிறாள். அவளுடைய கையறுநிலையை இப்பாடலில் கயமனார் சித்திரிக்கிறார்.

சிறப்புக் குறிப்பு:-

தன் கணவனை இழந்த பெண், தான் வருந்துவது மட்டுமல்லாமல், தன் கணவனின் தாயார் எப்படியெல்லாம் வருந்துவாளோ என்று எண்ணுவது, அவளின் பாராட்டத்தக்க உயர்ந்த நற்பண்பைக் காட்டுகிறது.

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218450
  • Total likes: 23121
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ புறநானூறு ~
« Reply #254 on: March 25, 2014, 08:00:13 PM »
புறநானூறு, 255. (முன்கை பற்றி நடத்தி!)
பாடியவர்: வன்பரணர்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: பொதுவியல்.
துறை: முதுபாலை.
==================================

’ஐயோ!’ எனின்யான் புலிஅஞ் சுவலே;
அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கவல்லேன்;
என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே;
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே

அருஞ்சொற்பொருள்:-

அகன் = அகன்ற
விதிர்ப்பு = நடுக்கம்
நிரை = வரிசை
இன்னாது = தீமை (சாக்காடு)
கூற்று = கூற்றுவன் (இயமன்)
வரை = மலை
சேர்கம் = சேர்வோம்
சின் – முன்னிலை அசைச் சொல்

இதன் பொருள்:-

”ஐயோ!’ என்று ஓலமிட்டு அழுதால் புலி வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். இங்கிருந்து உன்னை அணைத்துக்கொண்டு செல்லலாம் என்றால் உன் அகன்ற மார்புடைய உடலை என்னால் தூக்க முடியவில்லை. உன்னை இவ்வாறு அறமற்ற முறையில் கொன்ற கூற்றுவன் என்னைப்போல் பெரிய நடுக்கமுறுவானாகுக. என்னுடைய வளையல் அணிந்த முன்கையைப் பற்றிக்கொண்டு மெல்ல நடப்பாயானல் மலையின் நிழக்குச் சென்றுவிடலாம்.”

பாடலின் பின்னணி:-

தலைமகன் ஒருவன் போர்க்களத்திலிருந்து திரும்பி வராததால், அவன் மனைவி போர்க்களத்திற்குச் சென்றாள். அங்கு, அவன் இறந்து கிடப்பதைக் கண்டு அழுகிறாள். “ஐயோ! என்று ஓலமிட்டு ஒலியெழுப்பினால், புலி வருமோ என்று அஞ்சுகிறேன். உன்னைத் தூக்கிகொண்டு செல்லலாம் என்றால் உன் அகன்ற மார்பு பெரிதாகையால் அது என்னால் இயலாது. ஒரு தீங்கும் செய்யாத என்னை இப்பெருந்துயரத்தில் ஆழ்த்தி நடுக்கமுறச் செய்யும் கூற்றுவன் என்னைப் போல் பெருந்துயரம் உறுவதாகுக. நீ என் கைகளைப் பற்றிக்கொண்டு மெல்ல நடந்தால், மலையின் நிழலுக்குச் செல்லலாம்.“ என்று அப்பெண் கூறுவதைக் கண்ட புலவர் வன்பரணர் அவளுடைய அவல நிலையை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

கூற்றுவன் செய்த “இன்னாது” என்பதால், ”இன்னாது” இங்கு சாக்காட்டைக் குறிக்கிறது.

இறந்தவனால் நடக்க இயலாது என்று தெரிந்திருந்தும், அவனைச் “சிறிது தூரம் நட.” என்று அவள் கூறுவது, அவள் தெளிவான சிந்தனையற்ற நிலையில் உள்ளாள் என்பதை உணர்த்துகிறது.