கற்பு எங்கே
கற்புடையவள், பத்தினிகள் என்று பெண்களை வரையரைப்படுத்தி பார்ப்பது நியாயமா, கற்ப்பு என்பது என்ன, பத்தினி பெண்கள் என்றால் கற்ப்புடைய பெண்கள் என்பது பொருளா,
இரண்டாம் சந்திரகுப்தரின் காலத்தில் அதாவது 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கூறப்படும் ஊமையாய் படிப்பறிவே இல்லாதிருந்தும் காளிதாஸ் துர்கையின் ஆசியால் பல நூல்களை இயற்றியதாக கூறப்படும் மகாகவி காளிதாசரால் வட மொழியில் எழுதப்பட்ட மிகவும் பிரபலமான நூல் சாமுத்ரிகா லட்சணம், ஆண் பெண்களின் அவயங்களை அடிப்படையாகக் கொண்டு
1). மான் 2). பெட்டை குதிரை 3). பெண் யானை மூவகை பெண் இனமென்று பிரித்து நான்கு வகை சாதியாக
1). பத்தினி 2). சித்தினி 3). சங்கினி 4). அத்தினி என்று பிரித்து உடலின் ஒவ்வொரு அங்கத்தின் அமைப்பிற்கேற்ப குணம் செயல் திறமை அதிஷ்டம் என்று வகைபடுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இதில் பத்தினி வகையை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொள்பவர் எல்லா அதிஷ்டங்களையும் பெறுவார், பத்தினி பெண்களுக்குரிய உடலமைப்பின்படி அப்பெண்கள் நன்னடத்தை கொண்டவர்களாக விளங்குவார் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் படித்து அறிந்திருக்க வேண்டியவர்கள் சிற்ப்பிகளும் ஓவியர்களும் என்பதும் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் எழுதப்பட்ட காலத்திலேயே அப்படிப்பட்ட அங்க அமைப்புள்ள பெண்கள் வாழ்ந்தனரா என்பதற்கு எவ்வித சான்றுகளும் கிடையாது.
ஆண்களுக்கும் சாமுத்ரிகா லட்சணங்கள் அங்க அமைப்பிற்கேற்றபடி எழுதப்பட்டுள்ளது, எந்த வகை பெண்கள் எந்த வகை ஆண்களுடன் திருமணம் செய்து கொள்வது சிறந்தது என்பதை கணித்துக் கூறுவதற்கு சாமுத்ரிகா லட்சணங்கள் அடிப்படையாக இருந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது, ஆனால் அதற்கும் எவ்வித சான்றுகளும் இல்லை. சாமுத்திரிகா லட்சணக் குறிப்புகளை வைத்து ஆண் பெண்களை சரியாக ஜோடி சேர்க்கும் ஜோதிடர்களும் அதன் பிறகு இல்லை ஆகவே பத்தினி என்னும் வகைப் பெண்டிர் நிஜமாகவே வாழ்ந்தனரா என்பதற்கே சான்றுகள் இல்லாதிருக்கும் போது பத்தினி என்ற சொல்லுக்கும் நிஜ பெண்களுக்குமான ஒப்பிட்டு பார்ப்பது தேவையற்றதாகி விடுகிறது.
அடுத்ததாக கற்பு, ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடுவதால் கற்பு இழப்பதாக கூறப்படுகிறது. இதனால் திருமண பந்தத்திற்கு முன்னர் ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவு கொள்வதை சமூகம் (தமிழகத்தில்) ஏற்ப்பதில்லை, அப்படி தவறிய பெண்களை கற்ப்பிழந்த பெண்கள் என்று குறிப்பிடுகின்றனர். கற்பு என்பது உடற் சம்பந்தப்பட்டதாக கருதப்படுகிறது. திருமண பந்தத்திற்கு பின்னர் திருமணம் செய்த ஆணுடன் அல்லது கணவருடன் உடலுறவு வைத்துக் கொள்வது மட்டுமே முறையானது என்பது தமிழகத்தில் கூறப்பட்டும் அனுசரிக்கபட்டும் வருகிறது. மனதில் வேறு ஆணுடன் காதல் அல்லது விருப்பம் இருப்பின் அதை வெளியில் சொல்லாத வரையில் அல்லது யாருக்கும் தெரியாத வரையில் தவறியதாக அல்லது கற்பிழந்ததாக குற்றப்படுத்துவதில்லை.
கற்பு என்பது உடலுறவு மட்டுமே என்பதால் ஏற்கனவே வேறு ஒருவரை அல்லது பலரை விரும்பி விட்டு சம்பந்தமே இல்லாத புதிய ஆணுடனோ பெண்ணுடனோ திருமணம் செய்து கொண்டு வாழ்வதையே சமூகம் ஏற்றுக் கொள்கிறது. மனதளவில் எப்படி இருந்தாலும் அல்லது மறைவில் எது நடந்தாலும் அவர் கற்பிழந்தவராக கருதப்படுவதில்லை. பெண்களுக்கு கன்னித்தன்மை உள்ளவரா கன்னித்தமையை இழந்தவரா என்பதை அறிய மருத்துவ சோதனைகளும் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பெண்ணுக்கு மட்டுமே இதில் பெரும் பாதிப்புகள் ஏற்ப்படுகிறதே தவிர ஆண்களுக்கு மிகவும் குறைவாகவே பாதிப்புகள் ஏற்ப்படுகிறது. இதனால் மறைவான உறவுகள் பெருகிவருவதும் இயல்பாகி விடுகிறது.
இவ்வகை சமூக அவலங்கள் எப்போது மாறும்?