விபத்துகள்
சாலை விபத்து, ரயில் விபத்து, தீ விபத்து, இடி, மின்னல் தாக்குதல் போன்றவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையினை ஒவ்வொரு ஆண்டும் புள்ளியியல் துறை மற்றும் தேசிய குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கணக்கெடுத்து வெளியிடுகின்றனர்.
2010ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில் 3 லட்சத்து 84,649 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் மக்கள் தொகையில் 9.3 சதவிகிதம் கொண்ட மகாராஷ்டிராவில் விபத்து உயிரிழப்பு ஆறில் ஒரு பங்காக 16.7 சதவிகிதம் நடந்துள்ளது. 6.1 சதவிகித மக்கள் தொகை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 9.3 சதவிகித விபத்து உயிரிழப்புகளும், 5.7 சதவிகித மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் 8.4. சதவிகித விபத்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டு மே மாதத்தைவிட 2010ஆம் ஆண்டு மே மாதம் 5.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரை அதிக விபத்துகள் நடந்துள்ளன. சென்ற ஆண்டு மே மாதம் மட்டும் 42,546 பேர் விபத்துகளினால் உயிரிழந்துள்ளனர்.
2009ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து உயிரிழப்பை ஒப்பிடும்போது 2010ஆம் ஆண்டு 7.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஆண் பெண் விகிதம் 78:22. எல்லாவிதமான விபத்துகளிலும் பெண்களைவிட ஆண்களே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் மட்டும் பெண்கள் 66.6 சதவிகிதம் என்று அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.
2010ஆம் ஆண்டு 4 லட்சத்து 61,757 போக்குவரத்து விபத்துகள் நடந்துள்ளன. இதில் சாலை விபத்துகள் 4 லட்சத்து 30,654. ரயில் மற்றும் சாலை விபத்துகள் 2,843. மற்ற ரயில்வே விபத்துகள் 28,260 என்று புள்ளி விவரக் குறிப்பு கூறுகின்றது.