பூங்கொத்தை தொட்டு பார்க்க -
பூவொன்றுக்கு பூத்த ஆசை ;
பரிட்சயமில்லா பாட்டியின் -
கைப்பிடி வேலியில் அப்பூங்கொத்து !
* * * * *
உலக மலர்கள் ஊஞ்சலாட ஏங்கும் - கார்மேக
கூந்தல் இவளது என்றறியா மடந்தை;
இலையுதிர் கால காற்றில், தானே கிழியும் இலைகள் -
இவளது பாதம் தீண்ட தானென்று தெரியா குழந்தை !
மழைத்துளிகள் முத்தமிட்ட புல்வெளியில் -
மலர் பாதம் பதித்து நடந்ததோர் பூந்தேர்;
பூங்கொத்தின் காந்தம் இப்பூவை ஈர்க்க -
பழகிராத வெளிர் முகமோ அதனை தடுக்க -
செய்வதறியவில்லை !
பூவை சுற்றி வண்டுகள் தானே வட்டமிடும் -
பூங்கொத்தை சுற்றி இப்பூவும் வட்டமிடுவதேன் ;
பூவில் வண்டு தேன் தேடும் - பிற
பூக்களில் இப்பூக்குட்டி என்ன தேடிடுமோ !
* * * * *
விரல் தொடும் தொலைவில் பூங்கொத்து,
விரல் வேலியிட்ட பாட்டியிடம் சிநேக பார்வை,
பலகையை பற்றியபடியே பரதநாட்டிய பாவனை,
முன்வரிசை பற்களிலிரண்டு வீழ்ந்த செவ்வாயில் -
ஒரு போலிச்சிரிப்பு !
பாட்டி பார்க்கா வன்னம் -
பூங்கொத்தில் சிறியதொரு தீண்டல்,
அத்தீண்டலினூடே பரவசம்,
பூவும் பூவும் மோதிக்கொள்ளும் -
ஸ்பரிசம் உணர்ந்தே குதூகலம்,
குதூகலத்தின் உச்சத்திலோர் துள்ளல் !
பார்வை திரும்பும் தருணம்,
துள்ளல் விழுங்கி - மீண்டுமொரு
பொக்கை வாய் போலிச்சிரிப்பு,
இம்முறை வெட்கத்துடன் !
* * * * *
அனைத்தும் புரிந்தது -
பூங்கொத்தை உயர்த்தி
பூவொன்று எடுத்து
இவளிடம் கொடுத்தாள்
" கல்லறையில் உறங்கும் - என்
கணவருக்கு இப்பூங்கொத்து;
ஒரு பூ குறைந்தால்
கோபித்துக்கொள்ள மாட்டார் அவர் "
என்று சொல்லி...
* * * * *
அக்கவிதை - என்
கண்களில் காட்சியானது ;
அக்காட்சி - இன்று
இங்கே கவிதையானது ;