"சிதறுதடி என் இதயம்"
கல்லில் செய்த இதயமென என்னில் ஒன்று கொண்டிருந்தேன்,
சுமைகள் பல வந்தபோதும், மலைகள் போல நின்றிருந்தேன்,
இன்பமான வாழ்வு ஒன்றை எனக்கு நானே அமைத்திருந்தேன்,
உள்ளம் எல்லாம் உளைச்சல் இன்றி நிம்மதியாய் வாழ்த்திருந்தேன்.
கண்கள் என்ற ஆயுதத்தால் என் இதயம் பணிய வைத்தாய்,
உந்தன் பேச்சின் இனிமையிலே கதிரவனை குளிர வைத்தாய்,
வாழ்வின் சுவைகள் இன்னவென்று தெரியாமல் இருந்த என்னில்,
விடியல் ஒன்றை தோற்றுவித்து, பளிச்சென்று மிளிர வைத்தாய்.
நதிகள் போல ஓய்வின்றி தொடர்ந்து நீயும் பேசும்போது,
நேரம் என்ற ஒரு வார்த்தை இருக்கும்தடம் மறந்து போனேன்,
தாய்மை, நட்பு, உறவு யாவும் உன்னிடத்தில் கண்டபோது,
புத்துயிரை நானும் பெற்று, மீண்டும் உன்னால் பிறந்துவந்தேன்.
உனையே நான் உலகமென்று உள்ளத்தில் பதித்து வைத்தேன்,
தவிப்புகள் தள்ளிவிட உன்னிடத்தில் காதல் சொன்னேன்,
தடைகள் பல உண்டு வீட்டில் என்று சொல்லி விலகி நின்றாய்,
தேடி வந்த காலம் போக, தேட வைத்து மறைந்து போனாய்.
எந்தன் வாழ்வில் கனவு போல வந்து போன என்னவளே,
என்னுயிரில் இன்பம் தன்னை, உணர வைத்த பூமகளே,
உள்ளம் எல்லாம் உருகுதடி, உன்னை எண்ணி ஏங்குதடி,
இரும்பென்று இருந்த போதும், இந்த காதல் கொல்லுதடி.
சங்கிலிகள் சுத்தி எந்தன் இதயம் காக்க வேலி போட்டேன்,
இதுவும் இன்று கடந்து போகும் என்று நானும் பொறுமை காத்தேன்,
அவைகள் மீறி என் இதயம் துண்டு துண்டாய் சிதறிப்போக,
காதல் போல ஒரு சக்தி இல்லை என்று உருகி போனேன்.
-குரு-