அன்புள்ள காதலிக்கு,
நிலவுதனில் என் விழிகள் நோக்கையில்
உன் முகமது எந்தன் கண்களை
உறையவைக்கும். உறைந்து போன
நொடிகளை உன் குரலோசை ஏந்தி
வந்த தென்றல் என்னைத் தீண்டி
விழிக்க வைக்கும்.
தேசம் கடந்து பாரினிலே பாதகனாய்
நாட்கள் தொடர.
கடல் தாண்டி பதுமை உந்தன் குரலோசை
கேட்க எந்தன் மனது விரைய.
நினைவாய் தொடரும் நாட்களை
நிழலாய்த் தொடர யதார்த்தம் மறுக்கும்.
அதையிறுத்து இதயம் வெதும்பும்
தருணத்தில், என் கண்ணீர்த்துளிகள் கொதித்து
வடிந்தோடும். காற்றில் நீராவியாய் கலந்து போன
கண்ணீர்த் துளிகள் நின்னை சரணடையும்.
அனுதினம் உந்தன் அழகை எந்தன்
ஞாபகங்கள் எடுத்துரைக்கும்.
அவள் அழகை வெல்ல யாருண்டு
இப்புவிதனில் என என் உள்ளம்
பெருமை கொள்ளும்.
பேச்சிழந்த ஊமையாய் இந்நொடிகள்
யுகமென எனது புத்தி உரைக்கும்.
எந்தன் உணர்வை சொல்ல என் விரல்கள்
சில வரிகள் கிறுக்க முனையும்.
நாடத்துடிக்கும் இதயம் நிஜமறிந்து
துடிக்க மறுக்கும்.
ஆனவன் என் உணர்வின் பதற்றம்
எரிமலையாய் வெடிக்கும்.
உணவது என் வயிற்றை நிரப்ப
என் மனது தடுக்கும்.
சினம் கொண்ட என் மனம்
இந்த வாழ்வை ஏற்க மறுக்கும்.
இந்நிலையில் எனது பேனாவின்
கிறுக்கல் காகிதத்தில் பரவும்.
வார்த்தை நிரம்பாது கண்ணீர்
மொழியை மறைக்கும்
அதையும் கடந்து உணர்வு பெருக்கும்.
பேனாவும் வேகமாய் பல வரிகள்
கிறுக்கும். அதை ஏற்க உன் விலாசம்
கதவைத் திறக்கும்.
உன் கையில் என் மனம் வரிகளாகத்
தவழும்.
இப்படிக்கு
காதலன்