கொஞ்சிடும் உன் பேச்சை
கெஞ்சித்தான் பார்க்கிறேன்
மிஞ்சிய கண்ணீர்த் துளிகளில்
உன் நினைவுகளைச்
சுமந்தே இருக்கிறேன்
மலர்ந்திடும் மொட்டினில்
உதிர்ந்திடும் இதழ்களாய்
மலர்ந்திட்ட காதலை
மணலினுள் தொலைத்திட்டேன்.
நீ சகித்த இடங்களை
நான் உணராத நொடிகளால்
வெடித்த சண்டையில்
உனைக் காக்க மறந்திட்டேன்
நீ கலங்கிய வேளையில்
நான் குழம்பிய தருணத்தால்
உடைந்த உன் மனதில்
ஒலித்த குரலினைக்
கேட்கத்தான் தவறிட்டேன்
நிலவின் வெளிச்சத்தில்
உலகினை மறந்து
உணர்வினைப் பகிர்ந்த காதல்
இன்று எனைத் தனிமையாக்கியதே
நித்தமும் எனை எழுப்பும்
உன் கனா,
இன்று அதைக் காணா
நாட்களும் முட்களானதே
மலைகளின் வான் தொடு உச்சத்திலும்
நதிகளின் ஓட்ட வெள்ளத்திலும்
மேகத்தின் அடர்ந்த பாதையிலும்
வீசியடிக்கும் காற்றிலும்
இடைவேளை இன்றி எனையழைத்த
குரலினைத் தேடிப் பார்க்கிறேன்
நித்தமும் எனை சொந்தம் கொண்டாடிய
உறவினை அலைந்து பார்க்கிறேன்
நான் நடக்கும் பாதையில்
உன் காலடி சுவடு இல்லாத
நிஜத்தினை அறிந்த பின்பு தான்
தேகம் இருந்தும் உயிர் ஜீவன்- அவள்
நிழலினைத் தேடுகிறேன்
பெண்ணாகப் பிறந்தவள்- நீ
மென்மையாகிப் போனாய்
ஆணாக இருப்பதால்- நான்
வன் சொல் பேசி
உனைக் காக்க மறந்தேன்