திணற திணற காதல் செய்கிறாய்...
இடைவெளிகளே இல்லாமல்
உன்னை உணரச்செய்கிறாய்..
நிபந்தனையுடன் கூடியதோ அல்லது
நிபந்தனையற்றதோ உன் அன்பென்பதே
போதுமானதாக இருக்கிறது.
எப்படி?. எதற்கு?. ஏன்?.எவ்வளவு?.
என ஆராயும் அளவில்
நான் இல்லவே இல்லை.
நீ நெருங்கி வரும் போதெல்லாம்
நரம்புகளில் பரவிய சில்லிப்பு
இத்தனை காலம் தாண்டியும் இன்னும்
பாரன் ஹீட் மாறாமல் தொடர்கிறது..
உன் வசீகரத்தின் மீதான
ஈர்ப்பாய் தொடங்கிய காதல்,
உன் மீதான நேசமாய் மாறி
எதுவாகவோ பரிணமித்து நிற்கிறது..
காதல் திகட்டுமா என கேள்வி வைக்கிறாய்
சுழற்சி அவதாரம் நீ ...
காதலி திகட்டி மனைவியாய் ,
மனைவி திகட்டி மகளாய்
அத்தனையும் திகட்ட தோழியாய்
பரிணாமங்களில் தொடர்ந்திடு என்கிறேன்.
காதலியாய்,
தோழியாய்
மகளாய், மனைவியாய்...
அத்தனையுமாய் நான்
உருவகித்துணர்ந்த ஒரு பெண் நீ..
ஒரே பெண் நீ.
நீ என்பது
ஒரு பிறவி முழுமைக்குமான என் ஏக்கம்..
வெளிப்படுத்தாத
அன்பென்பது அநீதி..
எனக்கானவள் நீ என
கத்திச்சொல்லும் உணர்வுகளை
ஏதோ ஏதோ இஸங்கள் பேசி ஏமாற்ற மனமில்லை..
நீயோ பொய்த் தோரணையோடு
விட்டுக்கொடுத்தல் குறித்து வகுப்பெடுக்கிறாய்..
உனக்கு பொருந்தவே இல்லை.