உன்னை மேலும் நேசிக்க
வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு கணமும்
உனக்கானதாய் மாற்றும்
சூத்திரம் ஒன்றை தேடுதலில்
கனமாகி நகராமல் நிற்கிறதென் பொழுதுகள்
உன் இருத்தலில்
என்னவாய் உணர்கிறேன் என்பது
சொற்களுக்குள் அடங்க மறுக்கும்
பேரானந்த பரவசநிலை
என்பதை அறிகிறேன்
பரவசங்கள் நிலையானவை இல்லையாம்.
இது வெறுமனே பரவசமும் இல்லை
என் உணர்வுகளின் மொழிக்குள்
அடங்கா இவ்வுணர்வை அது இது என
வகைப்படுத்திச் சொல்வதிலும் உடன்படுவதில்லை..
உன்னை உள்ளபடி உணர்ந்துக் கொள்ள
நானாதல் ஒன்றே வழி
எனக்கு நீ என்னவாகிறாய்
என்பதை அறிந்துகொள்ள வேண்டுமெனில்
ஒரு பொழுதேனும் நானாகிவிடு
உன்னை அறிய நானாதல் ஒன்றே வழி..