எந்தன் களிப்புகளின்
நிறைவு நாள்..
எந்தன் ஆனந்தத்தின்
இறுதி நாள்..
எந்தன் சந்தோஷங்களின்
முடிவுரை நாள்...
உந்தன் கண்ணீரின்
துவக்க நாள்..
எப்படி விட்டுச் செல்ல முடிந்தது என்னால்..?
உந்தன் கன்னம் வருடி,
கைகள் பற்றி எப்போதும்
துணை வருவேன் என்று
சங்கல்பம் எடுத்தேனே?
அத்தனையும் காற்றில் பறந்து மறையும் பறவை ஆனதே...!
நான் இல்லாமல் எங்ஙனம்
கழியும் உன் பொழுதுகள்?
நான் இல்லாமல் எப்படி
கரையும் உன் காலங்கள்?
உனக்கு மனிதர்களைத் தெரியாது,
அவர்கள் நிறங்களும் புரியாது?
உலகம் அறியா பாலகி நீ..
உன்னை விட்டு சென்ற பாவி நான்...
அன்பே, உடலை விட்டுத் தான் போயிருக்கிறது என் உயிர்..
உன்னை விட்டு போகவில்லை
என் ஆன்மா..
அது எப்போதும் உன்னைச் சுற்றியே
வலம் வரும்.. நலம் தரும்..
விதியின் பிடியால் நான் மாண்டாலும், வாழும் முடிவில் நீ உறுதியாய் இரு..
தன்னம்பிக்கையில் வைரமாய் இரு..
தன்னிரக்கம் பாராட்டி தன்னுயிர் நீக்கும் முடிவிற்கு எக்காலமும் போய்விட கருதி விடாதே...ஏனெனில் உன்னுள் வாழ்வதும் என் உயிர்தான்..
உன்னுயிரும் என்னுயிர் தான்..