56. பலர் கூறினும் பொய் மெய்யாகாது
உடங்கமிழ்தங் கொண்டா னொருவன் பலரும்
விடங்கண்டு நன்றிதுவே என்றால்-- மடங்கொண்டு
பல்லவர் கண்டது நன்றென் றமிழ்தொழிய
நல்லவனும் உண்ணுமோ நஞ்சு.
(பதவுரை) உடங்கு-உயிரும் உடம்பும் கூடிநிற்றற்குக் காரணமாகிய அமிழ்தம் கொண்டா னொருவன்-தேவாமிர்தத்தினைப் பெற்றா னொருவன், விடங்கண்டு பலரும் இதுவேநன்று என்றால்-நஞ்சினைப் பார்த்துப் பலரும் இதுவே தேவாமிர்தமென்று கூறினாலும், பல்லவர் கண்டது நன்று என்று-பலர் கண்டதே உண்மையாக இருக்குமென்று நம்பி, நல்லவனும் மடங்கொண்டு-அமிழ்தத்தைப் பெற்ற அவனும் அறியாமையை யுடையவனாய், அமிழ்து ஒழிய-கையிலுள்ள அமிர்தத்தை நீக்கி, நஞ்சு உண்ணுமோ-நஞ்சினை உண்பானோ? உண்ணான்.
(குறிப்பு) என்றால்:உம்மை தொகுத்தல் விகாரம் பெற்றுள்ளது. நல்லவனும்: உம்மை உயர்வு சிறப்பு. ஓ: எதிர்மறை. (56)
---------------------------------------------------------------------------------------------------
57. சிட்டராவார் இவரெனல்
தன்னையும் தன்னிற் பொருளையும் பட்டாங்கிற்
பன்னி யறமுரைக்க வல்லாரை--மன்னிய
துட்ட ரெனச்சிட்டன் தோற்றுவ தல்லாரைச்
சிட்டரென் றேத்தல் சிதைவு.
(பதவுரை) தன்னையும் தன்னிற் பொருளையும் பட்டாங்கிற் பன்னி-தன்னையும் தன்னால் அறியத்தகும் பொருளையும் உண்மையாகக் கூறி, அற முரைக்க வல்லாரை-அறங்கூற வல்லாரை, மன்னிய சிட்டரென-நிலைபெற்ற ஞானமுடையவரென, சிட்டன்-ஞானி, தேற்றுவது-பலருக்கும் தெளிவிப்பது நன்மை பயப்பதாகும், அல்லாரை-அத்தகைய ரல்லாதவர்களை, சிட்டர் என்று-ஞானிகளென, ஏத்தல்-புகழ்தல், சிதைவு-கேடு பயப்பதாகும்.
(குறிப்பு) பன்னுதல்-கூறுதல், பட்டாங்கு-நூல்நெறியெனலுமாம். (57)
----------------------------------------------------------------------------------------------------
58. ஏகான்மவாதிகளின் இயல்பு
எத்துணை கற்பினும் ஏகான்ம வாதிகள்
யுத்தியும் சொல்லும் பொலிவிலவாய்--மிக்க
அறிவனூல் கற்றா ரலவெனவே நிற்கும்
எறிகதிர்முன் நீல்சுடரே போன்று.
(பதவுரை) எத்துணை கற்பினும்-மிகப்பல நூல்களைக் கற்றாலும், ஏகான்ம வாதிகள்-ஆன்மா ஒன்றே என்று வாதிப்போரது, புத்தியும் சொல்லும்-அறிவும் சொல்லும், எறி கதிர்முன் நீள்சுடரே போன்று-சூரியன் முன் ஓங்கி எரியும் விளக்கேபோல், பொலிவிலவாய்-விளங்குதலின்றி, மிக்க-பெருமைமிக்க, அறிவன் நூல் கற்றார் அல எனவே நிற்கும்-இறைவனோதிய நூலைக் கற்றவரல்லர் என்று சொல்லுமாறே நிற்கும்.
(குறிப்பு) ஏகான்மவாதிகள்-அத்துவைத சமயிகள். ''விரி வெயிலில் விளக்காளியும்............போல் வெட்கி முகம் வெளுத்தான்'' என்ற சிவகாமி சரிதத் தொடரினை ஒப்புநோக்குக. (58)
---------------------------------------------------------------------------------------------------
59. பிறவிநோயை அறுக்கவல்ல பெரியார் இவரென்பது
அவ்விநய மாறும் மும்மூட மெண்மயமும்
செவ்விதி னீக்கிச் சினங்கடிந்து-கவ்விய
எட்டுறுப்பி னாய இயல்பினற் காட்சியார்
சுட்டறுப்பர் நாற்கதியிற் றுன்பு.
(பதவுரை) அவ்விநயம் ஆறும்-அச்சத்தால் வணங்குதல் முதலிய ஆறு ந்வ்விநயங்களும், மும்மூடம்-உலக மயக்க முதலான மூன்று மயக்கங்களும், எண் மயமும்-அறிவால் வருஞ் செருக்கு முதலிய எண்வகைச் செருக்குகளுமாகிய இவற்றை, செவ்விதின் நீக்கி-நன்றாகப் (முற்றிலும்) போக்கி, சினம் கடிந்து-வெகுளியையும் நீக்கி, கவ்விய-மேற்கொள்ளுதற்குரிய, எட்டுறுப்பின் ஆய இயல்பின்-ஐய மின்மை முதலான எட்டு உறுப்புக்களோடு கூடிய, நற்காட்சியார்-சிறந்த காட்சியாராகிய அறிவினையு முடையவர்கள், நாற்கதியில் துன்பு-நால்வகைப்பட்ட பிறவியால் வரும் நோயைஇ சுட்டு அறுப்பர்-சுட்டு அறுப்பவராவர்: (அழிப்பவராவர்.)
(குறிப்பு) விநயம்-ஒழுக்கமுடைமை, அவ்விநயம்-ஒழுக்கமின்மை. ‘மும்மூடமும்’ என உம்மையை விரிக்க அவ்விநய மாறாவன-அச்சம், ஆசை, லௌகிகம், அன்புடைமை, பாசண்டம், தீத்தெய்வ வணக்கம், மும்மூடம்: உலக மூடம், பாசண்டி மூடம், தேவமூடம். எண்மயம்-அறிவுச்செருக்கு, புகழ்ச்செருக்கு, குலச்செருக்கு, வீரச்செருக்கு, தவச்செருக்கு, செல்வச்செருக்கு, ஆகூழ்ச்செருக்கு, அழகுச்செருக்கு, எண்வகையுறுப்பு ஐயமின்மை, அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கின்மை, பழிநீக்கல், நன்னெறியில் நிற்றல், அருளுடைமை, அறப்பொருளை விளக்கல். இவற்றையெல்லாம் பின்வருஞ் செய்யுட்களில் விளங்கக் காணலாம். (59)
-------------------------------------------------------------------------------------------------------
60. அவ்விநயம் ஆறாவன
அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை
மிக்கபா சண்டமே தீத்தெய்வ-மெச்சி
வணங்குத லவ்விநயம் என்பவே மாண்ட
குணங்களிற் குன்றா தவர்.
(பதவுரை) மாண்ட குணங்களில் குன்றாதவர்-மாட்சிமைப்பட்ட குணங்களால் குறையாத நிறைந்த பெரியோர்கள், அச்சம்-அச்சமும், ஆசை-ஆசையும், உலகிதம்-லௌகிகமும், அன்புடைமை-அன்புடைமையும், மிக்க பாசண்டம்-இழிவு மிக்க புறச்சமயமும், தீத்தெய்வம்-கொடுந்தெய்வத்தை, மெச்சி வணங்குதல்-துதித்து வணங்குதலும், அவ்விநயம் என்ப-விநயமல்லாததென்று சொல்லுவர்.
(குறிப்பு) ஏ: அசைநிலைப் பொருளன. என்ப: உயர்திணைப் பலர்பால் எதிர்கால வினைமுற்று (60)