புறநானூறு, 72. (இனியோனின் வஞ்சினம்!)
பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: காஞ்சி.
துறை : வஞ்சினக் காஞ்சி.
======================================
நகுதக் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.
அருஞ்சொற்பொருள்:-
மீக்கூறல் = புகழ்தல்
உளைதல் = மிக வருந்துதல்
படு = பெரிய
இரட்டுதல் = மாறி மாறி ஒலித்தல்
பா = பரவுதல்
பணை = பருமை
உறு = மிக்க
துப்பு = வலிமை
செருக்குதல் = அகங்கரித்தல்
சமம் = போர்
அகப்படுத்தல் = சிக்கிக்கொள்ளுதல், பிடிக்கப்படுதல்
செல்நழல் = சென்றடையும் நிழல்
வரைதல் = நீக்கல்
புன்கண் = துயரம்
கூர்தல் = மிகுதல்
இதன் பொருள்:-
நகுதக் கனரே=====> யாம் என்று
“இந்த நாட்டைப் புகழ்ந்து கூறுபவர்கள் ஏளனத்துக்குரியவர்கள்; இவன் இளையவன்” என்று என் மனம் வருந்துமாறு கூறி, தங்களிடத்து மாறி மாறி ஒலிக்கும் மணிகளணிந்த பரந்த பெரிய பாதங்களையுடைய நெடிய நல்ல யானைகளும், தேர்களும், குதிரைகளும் படை வீரர்களும் இருப்பதை எண்ணி
உறுதுப்பு=====> காணாது
எனது வலிமையைக் கண்டு அஞ்சாது, என்னைப்பற்றி இழிவாகப் பேசும் சினத்தொடு கூடிய வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அழியுமாறு தாக்கி அவர்களையும் அவர்களது முரசுகளையும் கைக்கொள்வேன். நான் அவ்வாறு செய்யேனாயின், என் குடை நிழலில் வாழும் மக்கள் சென்றடைய வேறு இடமில்லாமல்
கொடியன்எம்=====> உறவே
“ எம் வேந்தன் கொடியவன்” என்று கண்ணீர் வடித்து அவர்களால் கொடுங்கோலன் என்று தூற்றப்படுவேனாக. மற்றும், மிகுந்த சிறப்பும் உயர்ந்த கேள்வியுமுடைய மாங்குடி மருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக. என்னால் காப்பாற்றப்படுபவர் துயரம் மிகுந்து என்னிடம் இரக்கும் பொழுது அவர்கட்கு ஈகை செய்ய இயலாத வறுமையை நான் அடைவேனாக.
பாடலின் பின்னணி:-
தலையாலங்கானத்தில் பகைவர் எழுவரும் ஒன்று கூடிப் போரிட வந்தனர் என்பதை அறிந்த நெடுஞ்செழியன், “ நான் இளையவன் என்று நினைத்து என் வலிமையை அறியாமல் இவர்கள் என்னிடம் போரிட வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப் போரில் அழிப்பேன்; அங்ஙனம் நான் அவர்களை அழிக்காவிட்டால், என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும்; புலவர்கள் என்னைப் பாடது என் நாட்டைவிட்டு நீங்கட்டும்; இரவலர்க்கு ஈயவொண்ணாத கொடிய வறுமையும் என்னை வந்து சேரட்டும்” என்று வஞ்சினம் கூறுகிறான். இவனது வரலாறு முன்பே நமது பக்கத்தில் பதிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இணைப்பு :-
சிறப்புக் குறிப்பு:-
முந்திய பாடலில் பூதப்பாண்டியன் கூறியதைப்போல், இப்பாடலில் பாண்டியன் தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் மக்களால் கொடுங்கோலன் என்று கருதப்படுவது ஒரு பெரும்பழி என்று எண்ணுவதைக் காண்கிறோம். மற்றும் புலவர்களால் புகழ்ந்து பாடப்படுவது ஒரு தனிச் சிறப்பு என்பதும் அதை மன்னர்கள் பெரிதும் விரும்பினார்கள் என்பதும் இப்பாடலில் காண்கிறோம். தன்னிடம் இரப்பவர்க்கு ஈகை செய்யவியலாத அளவுக்கு வறுமையை அடைவது இறப்பதைவிடக் கொடுமையானது என்ற கருத்தை “ சாதலின் இன்னாதது இல்லை; இனிது அதூஉம் ஈதல் இயையாக் கடை” என்ற குறளில் (குறள் - 230) திருவள்ளுவர் கூறுகிறார். இக்குறளுக்கும் இப்பாடலில் இம்மன்னன் கூறும் கருத்துக்கும் உள்ள ஒற்றுமை சிந்திக்கத் தக்கது.