டெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.
பல்கலைக்கழகத்தின் விடுதியின் அறை ஒன்றில் மாணவன் ஒருவன் மாணவி ஒருத்தியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியுலகிற்கு வந்தன. இந்த வீடியோ ஆறு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியே கசிந்தவுடன் கல்லூரி நிர்வாகம் சிடியை கைப்பற்றியது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக(!) செல்போன்கள் மூலம் வேகமாக இந்த காட்சிகள் பரவின. ஆபாச வீடியோக்களை வைத்து வியாபாரம் செய்யும் குழுக்களால் இது எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நாட்டின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற இந்த கேவலமான செயல் நமது நாட்டின் கலாச்சாரம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
இது போன்ற ஒழுக்க கேடுகள் இனியும் நடைபெறாமல் தடுக்க கல்லூரி நிர்வாகம் சில விதிமுறைகளை விதித்தது. இரவு 10.30 மணிக்கு மேல் வெளியில் உள்ளவர்கள் விடுதிக்கு வரக்கூடாது, இரவு 10.30 மணிக்கு மேல் மாணவர்கள் விடுதிக்கு மாணவிகள் செல்லக் கூடாது, மாணவியர் விடுதிக்கு மாணவர்கள் எப்போதும் செல்லக் கூடாது என்பன புதிய விதிகளாக விதிக்கப்பட்டன. உடனே இதற்கு பயங்கரமான எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வேறு யாருமல்ல… கல்லூரி மாணவர்கள்தான்!! மாணவர்கள் விடுதி நிர்வாகியின் கட்டிடத்தை முற்றுகையிட்டவுடன் கல்லூரி நிர்வாகமும் புதிய விதிமுறைகளை திரும்ப பெற்றுக்கொண்டது.
இந்த விதிகள் ஏற்கெனவே ஏட்டளவில் உள்ளன. இதனை தாங்கள் ஒரு போதும் பின்பற்றப்போவதில்லை என்று மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் போது அதனை விதிப்பதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்று கல்லூரி நிர்வாகம் கூறுகிறது. புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் மாணவர்களின் இச்செயல் பெரும் அதிர்ச்சியை தருகிறது.
மாணவர்களின் விடுதியில் மாணவிகளுக்கு என்ன வேலை?? பெண்களுக்கு கல்வி அவசியம்தான், அதற்காக அவர்கள் தங்களின் ஒழுக்கத்தையும் கற்பையும் தான் கட்டணமாக செலுத்த வேண்டுமா? மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பித்துக் கொடுக்க வேண்டிய கல்வி நிலையங்களின் நிலை இவ்வாறு உள்ளது. அடுத்து வளரக்கூடிய தலைமுறை எந்த நிலையில் வளருவார்கள் என்ற கேள்விதான் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்ட அனைத்து பெற்றோர்களின் மனதிலும் உள்ளது.
பள்ளிகளும் இதே நிலையில்தான் உள்ளன. மாணவர்களும் மாணவிகளும் ஒரே அறையில் தங்குவது, கேளிக்கைகள் என்ற பெயரில் கும்மாளம் போடுவது இதுதான் இன்றைய கல்லூரி நாட்களின் அடையாளமாக இருக்கின்றன. சில மாணவிகள் அணிந்து வரும் ஆடைகள் அவர்கள் கல்லூரிக்கு வருகிறார்களா இல்லை பேஷன் ஷோவிற்கு வருகிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இதனை எல்லாம் தவறு என்று யாரேனும் சொன்னால் அவரை இருபொத்தொன்றாம் நூற்றாண்டில் வாழ்வதற்கு லாயக்கற்ற ஒரு மனிதனாகவே மற்றவர்கள் பார்க்கின்றனர்.
பாரம்பரியமிக்க நமது கலாச்சாரம் தற்போது எந்த குழியில் புதைக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை.
இந்நிலைக்கு யார் காரணம்?
பிள்ளைகளுக்கு அளவிற்கு அதிகமான சுதந்திரத்தை கொடுத்து அவர்களை மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்க்கும் பெற்றோர்களா?
பாடம் எடுப்பது மட்டும்தான் எங்களின் வேலை என்று கடமைக்காக செயல்படும் ஆசிரியர்களும் பேராசிரியர்களுமா?
இல்லை தங்களை நாகரீகத்தின் புதிய பரிணாமமாக நினைக்கும் மாணவ சமுதாயமா?
எது எப்படியோ, நிலைமை எல்லையை மீறி மோசமாகி விட்டது என்பது மட்டும் உண்மை. தற்போதைய நிலையை பார்க்கும் போது பல ஆண்டுகளுக்கு முன்னர் மௌலானா மௌதூதி அவர்கள் கேட்ட கேள்விதான் ஞாபகத்திற்கு வருகிறது… ‘பள்ளிக்கூடங்களா? பலிபீடங்களா?’