பணம் கையில் இருந்தால் அந்தரத்தில்
தான் பறக்க தோன்றும் -அது அந்த
பணத்தின் குற்றமா ?
இல்லை பணம்வைத்தவனின்
குணத்தின் குற்றமா ?
சின்னஞ்சிறு வயதில் அப்பா தரும்
தினசெலவு ஐந்து ரூபாயில்
இலந்தை பழவும் ,
பேர் சொன்னாலே எச்சில் ஊரும்
நெல்லிக்காயில் உப்பும் சிறிது மிளகுபொடியுமிட்டு
நண்பர்களுடன் பகிர்ந்துண்ட நாட்கள்
"எப்போதோ கிடைக்கும் பலாக்காயை விட
இப்போது கிடைக்கும் களாக்காய் மேல் என
வாங்கி தின்ற புளிப்பும் இனிப்பும் கொண்ட
களாக்காய் "
மிச்சம் சிறுது சிறுது பிடித்து தம்பிக்கு பிடித்த
பால் ஐஸ் வாங்கி தந்த மன நிறைவு
இன்று பணம் நிறைய கொடுத்து
பீட்சாக்களும் பர்கர்களும் சாப்பிடுகையில்
வருவதில்லை
வீட்டில் அஞ்சறை பெட்டியிலும்
அஞ்சாறு சின்ன பெட்டியிலும்
அம்மா மறைத்து வைத்து
தேவையான சமயத்தில் வெளிவரும்
அலாவுதீன் பூதம் போல
காத்திட்ட அந்த பணத்திற்கு இணை
வங்கி லாக்கரிலும் ,
மெத்தைக்கு அடியிலும்
தண்ணீர் தொட்டியிலும் சேர்த்து வைத்திருக்கும்
பணம் ஈடாகுமோ ?
அளவாய் இருந்தால்
ஆனந்த களிப்பையும்
அதிகம் இருந்தால்
அச்சத்தில் தவிப்பையும்
தரும் இந்த பணம்
அது பணத்தின் குணமல்ல
அது வைத்திருக்கும் மனிதனின்
குணம்
அளவோடு வைத்திரு
மனிதா
வளமோடு வாழ்ந்திரு ...