நட்பு! நட்பு! நட்பு!
நட்பில்லா வாழ்வு வெறுமை
நண்பன்! நண்பன்! நண்பன்!
நண்பனுள்ள வாழ்வு அருமை
நட்பின் மகிமையை
என்னவென்று சொல்ல..?
பேனையும் மகிழ்ச்சியால்
புன்னகைக்கிறது மெல்ல...
பள்ளிப் பருவமதில் கொள்ளும்
நட்பின் சுகம்,
அள்ள அள்ளக் குறையாத
கொள்ளை இன்பம்...
ஆடலுக்கும் பாடலுக்கும்
இருந்ததில்லை பஞ்சம்
விளையாட்டு கிண்டல்களில்
பொய்க்கோபங்கள் கொஞ்சம்
நண்பனின் குறும்புகள் கூடினால்
ஓடோடி ஆசானிடம் தஞ்சம்
இன்று நினைத்தாலும்
விழுந்து சிரிக்கிறது நெஞ்சம்
மழையிலும் வெயிலிலும்
சேதாரமான குடையின் கீழ்
நண்பனின் தோளை அணைத்து
ஆதாரமாய் தாங்கிச் செல்லும் சுகம்,
கோடிகள் கொட்டினாலும் கிடைக்கா
நினைவுகளின் புதையல்கள்...
நண்பனுடன் இணைந்து
வெட்டிக் கதைகள் பேசி
சாலையில் காட்சிகள் கண்டு
துள்ளிச் சென்ற நாட்கள்,
கல்வெட்டில் பதித்து
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்...
பணத்தின் அந்தஸ்து
அறியாத நட்பு
நிறத்தின் பேதம்
அறியாத நட்பு
ஜாதியின் பிரிவினை
அறியாத நட்பு
பள்ளி நாட்களில்
நாம் கொள்ளும் நட்பு...
வைகையாய் பெருக்கெடுத்த
அந்த நட்பின் நாட்களை
எண்ணிப் பார்க்கையிலே
விழிகளின் ஓரம் நீர்த்துளிகள்...
கண்ணீர்த்துளிகள் நனைத்தது
என் கன்னங்களை மட்டுமல்ல !
பள்ளி நட்பிற்காக ஏங்கும்
என் நினைவுகளை
வரிகளாக ஏந்தும்
இக்கவிதை ஏட்டினையும் கூட...