பறவைகள் மட்டுமா பலவிதம்...?
மனிதர்களும் பலவிதமே...
மனிதர்கள் மட்டுமா பலவிதம்...?
அவர்கள் சிரிப்பும் பலவிதமே...
நீ மழலையாய் பிறக்கையிலே
வஞ்சகமற்ற மனதின் வெள்ளை சிரிப்பு...!
நீ சிறுவராய் வளர்கையிலே
விளையாட்டு ததும்பும் குறும்பு சிரிப்பு...!
நீ வாலிபமாய் வளர்கையிலே
வயது கோளாறால் காதல் சிரிப்பு...!
நீ பொறுப்பை உணர்கையிலே
சாதிக்கலாம் என நம்பிக்கை சிரிப்பு...!
நீ குடும்பமாய் இணைகையிலே
துணையின் கைப்பற்றிய இன்ப சிரிப்பு...!
உன் சேய் உதிக்கையிலே
உன் இரத்தமென ஆனந்த சிரிப்பு...!
உன் மழலை வளர்கையிலே
உன் நகலென பெருமித சிரிப்பு...!
உன் வாரிசு திருமணம் காண்கையிலே
உள்ளம் பூரித்து கண்ணீர் சிரிப்பு...!
உன் பேரன் பேத்தியை சுமக்கையிலே
வம்சம் தழைக்குமென வீர சிரிப்பு...!
உன் முடி நரைத்து முதிர்ச்சி அடைகையிலே
மலரும் நினைவுகளால் மென்மை சிரிப்பு...!
உன் துணையின் உயிர் பிரிந்த பின்
வெளியுலகுக்கு மட்டும் பகட்டு சிரிப்பு...!
எத்தனை எத்தனை வகையாய்
நீ கொள்கிறாய் சிரிப்பு...
புன்னகை ஓயாது தவழும்
வாழ்க்கையே என்றும் சிறப்பு...
சிரித்து சிரித்தே
ஓடிச்செல்லும் உன் வாழ்க்கை,
சிரிப்பை நிறுத்த
ஓர் நாள் கொள்ளும் வேட்கை...
அன்று...
வகையாய் சிரித்த நீயோ
ஆடி அடங்கி இருப்பாய்!
உலக வாழ்வின் மோகம் துளைத்து
மண்ணுள் கிடப்பாய்!
நீ மண்ணில் வாழ்கையிலே
உன்னோடு சிரித்தவன்,
நீ மண்ணாய் போகையிலே
உனக்காய் அழ வேண்டும்...
உன்னோடு மகிழ்ந்தவன்,
உன் பிரிவை எண்ணி
மனதால் வருந்த வேண்டும்...
வாழும் நாட்களில்
உன் அன்பை சிரிப்பால் எல்லோரிடமும்
உண்மையாய் பரவச்செய்...
நீ இல்லா காலத்தில்
உன் பாசத்தின் மகிமையை மற்றோர்
உள்ளத்தால் உணரச்செய்...
அத்தனை ஆண்டு வாழ்ந்த வாழ்க்கைக்கு
அது மட்டுமே அர்த்தம்...
அதுவே நீ செத்து மடிந்த பின்
உன்னை காண வைக்கும் சொர்க்கம்...!!!