தனிமையின் நிழல்
பூக்கள் உதிரும் ஒரு மழைநாளில்
என்றென்றைக்குமாய் நீ விட்டுச் சென்ற
நினைவின் எச்சங்களை
தொட்டுச் செல்கிறது ஒரு சிறு பறவை
முடிவற்ற தேடலில் தொலைந்து போகும் சாத்தியம் கொண்ட அப்பறவையின்
இளப்பாறலுக்கு உன் நினைவுகளை
பரிசளிக்கிறேன்
உன் சுயமும் உன் பிம்பமும்
எனை கலைத்துப் போடும் ஒவ்வொரு நொடிக்கும் புதியதொரு ரணத்திற்கு
தயாராகிறேன்
நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கையின்மைகளுக்கும் இடையில்
தூண்டில் புழுவினை தொடும்
துடுப்பற்ற மீனாகி அலைகிறேன்
தூரங்களுக்கும்
தூரமின்மைகளுக்கும் இடையில்
உன் ஸ்பரிசம் தேடி திரியும்
சிறு பூனையென
முடங்கி கிடக்கிறேன்
இருளடங்கி விடியும் பொழுதில்
வெளிச்சக்கீற்றென நீ வந்து நிற்பாய் என நான் நம்பும் பாதையின்
நிச்சலனம் உணர்த்தும்
இந்த தனிமை தீராதென
திரும்பவும் ஆரம்பிக்க முடியாத,
எல்லையை கடக்கவும் முடியாத
சிக்கலான ஒரு வழித்தடத்தில்
தொக்கி நிற்கும் மனதிற்கு
முடிவிலியான பாதையின் நீளத்தை அளப்பதென்பது வீணென அறிவிப்பது எங்ஙனம்?
உன் விரல் கோர்த்து பிரிந்த கைகளில்
மிச்சமிருக்கும் இந்த வியர்வை வாசனை
தரும் வாதையிலிருந்து
இனி நான் தப்பிப்பது எங்ஙனம்?
தனிமை அடர்ந்திடும் பின்னிரவுகளுக்கு
கொடுக்கவென மீதமிருப்பது
இவ்வாசனைகள் தான்
இப்பாதையின் முடிவின்மை தான்
ஒரு பார்வையும், ஒரு புன்னகையும், ஒரு மௌனமும், மீதமிருக்கும்
இந்த காதலும்
முற்றுப்பெறாத இடைவெளிகளை நிரப்பும் அக்கணம்
நிழலென நீ விழும் நிலத்தில்
நிஜமென நான் நின்றிட வேண்டும்.
இந்த
காதல் மரத்தின்
உதிரும் இலை நீ
காயும் சருகு நான்..