இந்த காலத்தில்
சிங்கப்பெண்ணே என்று
வெறும் பாடல்களை மட்டுமே கேட்டு
பூரிப்படைகிறோம்,
ஆனால் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை
எதிர்த்த உண்மையான சிங்கப்பெண்
வீரமங்கை வேலூநாச்சியாரின்
ஒற்றர்
உலகின் முதல் தற்கொலைப் போராளி
குயிலி!!
ஆணாதிக்கத்தின் கீழும்
அடிமைத்தனத்தின் கீழும்
வாழ்ந்து வந்த பல பெண்களிடையே
வரலாற்றில் பெயர் பதித்த
போராளிப் பெண் இவள்.
வருடா வருடம் சுதந்திர தினத்திற்கு
கொடியேற்றலும் மிட்டாய் பகிர்தலுமாய்
கடக்கும் தினங்களில்
ஒரு சிலர் தியாகிகளின் பெயரே
நினைவு கூறப்பட்டும் மதிக்கப்பட்டும்
வருகிறது.
தெரிந்துகொள்ள முடியாமல்
மறைக்கப்பட்டும், மறக்கடிக்கப்பட்டும்
இருக்கும் போராளிகள்
எத்தனை எத்தனை பேரோ?
அப்படி மறைக்கப்பட்ட மற்றுமொரு
திறமிகு பெண் போராளி தான்
இந்த குயிலி!
பெண் என்றாலே மென்மையானவள்,
அமைதியானவள்,
ஆண்களுக்கு அடங்கி நடப்பவள்,
என்ற வரையறைகளுக்குள் நின்று விடாமல்,
ஆங்கிலேயரை எதிர்த்து போராடி
நின்ற
தீர மங்கையிவள்!
ஒவ்வொரு முறையும் நாச்சியாரை
கொல்ல முயன்ற
ஆங்கிலேயர்களிடமிருந்து
காப்பாற்றிய துணச்சல் மிகுந்த
சாகசக்காரி இவள்!
நாச்சியாரின் உயிருக்கு உயிராகவும்
அவளுக்கு பக்கபலமாகவும்
அன்று குயிலி இருந்திருக்காவிட்டால்,
சிவகங்கையை வெள்ளையனிடம் இருந்து மீட்ட
வேலு நாச்சியார் நமக்கின்று கிடைத்திருக்க மாட்டார்!
உடல் முழுதும் எண்ணயை பூசி
தன்னைத்தானே தீ மூட்டிக்கொண்டு
வெற்றிவேல் வீரவேல் என முழங்கியபடி
ஆங்கிலேயனின் ஆயுதக் கிடங்கில்
எகிறி குதித்து
அவனின் ஆயுதக் கிடங்கை
துவம்சமாக்கிய
உலகின் முதல் தற்கொலைப் போராளி இவள்!!
இன்று யார் நினைவில் இவள் இருப்பாள்?
அஞ்சாத பெண் சிங்கம்
வீர வேலு நாச்சியாரையே மறந்த உலகம் இது!
நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த
இந்த மறத் தமிழ்ச்சிகளைப் பற்றி
அடுத்த தலைமுறையினருக்கு
நினைவுப்படுத்த வேண்டிய
கட்டாயம் நமக்கிருக்கிறது!
சமுதாயத்தின் ஏச்சுப் பேச்சுகளிடையே
பெண் பிள்ளைகளைப் பாடுபட்டு வளர்த்து,
கயவர்களுக்கு
காவு கொடுக்கும் இந்த காலத்தில்
இந்த வீரப் பெண்மணிகளின்
கதையையே துணிவாக ஊட்டுவோம்!
கலையும், கல்வியும் மட்டும் கண்ணென கொள்ளாமல்,
ஒவ்வொரு பெண்ணுமே தன்னை
வதைக்கும்
அநீதியை எதிர்க்கும் நாளில்,
அவளும் மற்றுமொரு குயிலி தான்!