என் அழகிய நாய் குட்டியே
என் அன்பான சிநேகிதன் நீ
சூரியனை போல பிரகாசமானது
உன் பழுநிற கண்கள்
பால் போன்று வெண்மையானது
உன் கள்ளமில்லா மனது
இவ்வுலகில் அதிகம் விரும்புவது
யாதென கேட்பின்
என் செல்ல நாய்க்குட்டி
நீதான் என்பேன்
என்னுடன் நீ இருக்கையில்
குழந்தையாய் மாறி
குதூகலம் அடைகிறது
எனதுள்ளம்
விசுவாசமும் நன்றி உணர்வும்
ஒருங்கே பெற்ற என்னருமை
நான்கு கால் செல்லப் பிராணியே
நன்றி என்றொரு வார்த்தைக்கு
இதுவரை உவமை கண்டிரார் எவரும்
உனை அன்றி வேறொரு ஜீவனை
துன்பமாயினும் இன்பமாயினும்
உடனிருந்து ஆறுதல் தரும்,
நிபந்தனை எதுவும் இல்லா
அன்புதனை அள்ளித் தரும்
என் ஐந்தறிவு ஜீவனே
பாசம் காட்டுவதில் - அன்னை ஆனாய்
பாதுகாக்கும் கேடயமாய்
இருப்பதில் - தந்தை ஆனாய்
தீங்கிளைக்க நினைக்கும்
பகைவர் களிடமிருந்து
காக்கும் காவலாளி ஆனாய்
உற்ற நேரங்களில்
உறுதுணையாய் இருந்து
உயிர் நண்பனும் ஆனாய் !!
கடவுள் எனக்கு கொடுத்த
அற்புதமான வரம் நீ
என் வாழ்வில் நீக்க முடியா
ஓர் அங்கம் நீ
என்னருகில் வந்து
துள்ளி குதித்து நீ செய்யும்
சேட்டைகள் சலிக்காது
எத்தனை முறை பார்ப்பினும்
என்னை நான் நேசிப்பதை விடவும்
அதிகமாய் எனை நேசிக்கும்
அன்பு ஜீவன் நீ
ஆதாயம் எதிர்பார்த்து பழகும்
இம் மானிடர்களுக் கிடையில்
அன்பு ஒன்றை மட்டுமே எதிர்பார்த்து
எனை நீங்காவிருக்கும்
உன்னத ஜீவன் நீ
மனச் சோர்வுடன் அமருகையில்
மடிமீது வந்தென்னை
அரவணைத்து உற்சாகப்படுத்தி
கோபமாய் இருக்கையில்
நீ செய்யும் கோமாளித் தனத்தால்
எனைக் குதூகலப் படுத்தி
உன் கள்ளங்கபடமற்ற
அன்பினால் கட்டியணைத்து
என் முகத்தில் புன்னகை
வரச் செய்வாய்
உனக்கும் எனக்கும் இருப்பது
ஓர் அசைக்க முடியா பந்தம்
என் வாழ்க்கையை
முழுமை ஆக்கிய
ஒப்பற்ற ஜீவன் நீ
முடிவில்லா மகிழ்ச்சி நீ
உலகில் விலை மதிப்பற்றது
தங்கம் வைரம் முத்து என்பர்
அவற்றை விடவும் விலை
மதிப்பிட முடியாதது
நீ எனக்கு தரும் அன்பும்
அளவில்லா ஆனந்தமும்
மன அமைதியும் !!
இனி ஒரு பிறப்பு உண்டெனில்
உடன் பிறக்க வேண்டிடுவென்
என் உடன் பிறவா சகோதரனே !!!
Dogs - Save them and pet them ❤️❤️