பாகம் 3:
------------------------------------------------------------------------------------------------------------------
சொல்ல மறந்துட்டேன். ஜெஸ்ஸி பொமரேனியன் இனத்தை சேர்ந்தவ. நல்லா புசுபுசுனு நிறைய முடி இருக்கும். வெள்ளைக் கலர்ல. பார்க்க தேவதை மாதிரி இருப்பா. அவ வாலாட்டிட்டு போற ஸ்டைலே தனி. அவ அந்த இடத்தை விட்டுப் போனதும் உலகமே இருண்ட மாதிரி இருந்துச்சு. கண்ணை இருட்டிட்டு வர்ற மாதிரி இருந்துச்சு. உண்மையிலேயே நான் மயக்கமாயிட்டேன்.
கண் முழிச்சுப் பார்த்தா ஏதோ ஆஸ்பிடல்ல இருந்தேன். சுத்தி அந்த எஞ்சினீயரம்மாவும் எஞ்சினீயரும் நின்னுக்கிட்டு இருந்தாங்க. எஞ்சினீயரம்மா கண்ணுல கண்ணீர். ‘விமானப்பயணம் ஒத்துக்கலேன்னும் அதனால மயக்கமாயிருக்கலாம்னும்’ டாக்டர் சொல்லிட்டு இருந்தார். ரெண்டு மூணு நாள்லேயே சரியாயிடும்னு சொல்லி கொஞ்சம் மருந்து எழுதிக் கொடுத்தார். எனக்கில்ல தெரியும் உயிர் போனதுக்கு அப்புறம் இங்கிருப்பது வெறும் உடல் தானே. என் ஜெஸ்ஸி எங்க இருக்காளோ.. எப்படி இருக்காளோ? ஆனா அவ இந்த நாட்டில தான் இருக்காங்கற நெனப்பே எனக்கு தெம்ப கொடுத்தது.
ஊருக்கு கொஞ்சம் தள்ளி பெரியவீட்டை எஞ்சினீயர் வாடகைக்கு எடுத்திருந்தார். பெரிய வீடு, நீச்சல்குளம், நான் தங்க தனிவீடுனு அமர்க்களமா இருந்தது. நாங்க போன நேரம் வானிலையும் நல்லா இருந்தது. ரெண்டு நாள் வீட்டில நான் ரெஸ்ட் எடுத்தேன். எஞ்சினீயரம்மா எனக்கு வேளாவேளைக்கு சாப்பாடும் மருந்தும் கொடுத்தாங்க. ரெண்டு நாள் கழிச்சு கார்ல ஊர் சுத்த கிளம்பினோம். அந்த ஊரில இருக்கிய பெரிய பார்க்குக்கு போனோம்.
பார்க்க பார்க்க என் கண்ணு விரிஞ்சுது. யப்பா.. எவ்ளோ பெரிய பார்க். டஸல்டார்ஃப்ல பார்க் இருக்கும். ஆனா இவ்ளோ பெரிசு இல்லே. ஏகப்பட்ட மரங்களும், செடிகளும்.. பச்சைப்பசேல்னு புல்வெளிகளும்னு ஆள அசத்துச்சு. கூட்டமும் அதிகமில்லை. என்னை மாதிரியே நிறைய டாக்குங்க வந்திருந்தாலும் புது இடங்கறதால யார்கிட்டேயும் பேசல. என்னைக் கூட்டிட்டு போன எஞ்சினீயர் கொண்டு வந்திருந்த ஃப்ரீஸ்பிய தூக்கிப் போட்டார். நான் ஓடிப் போய் எடுத்து வந்தேன். இது தான் எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்ச விளையாட்டு. விளையாடி ரொம்ப நாள் ஆச்சு. எஞ்சினீயரம்மா ஒரு ஓரமா பெஞ்ச்சில உட்கார்ந்து ஸ்வெட்டர் பின்னிட்டு இருந்தாங்க. அன்னிக்கு தான் எனக்கு விஷயமே தெரியும், எங்க வீட்டுல நாலாவதா ஒருத்தர் வரப்போறாங்க. இன்னும் ஏழு மாசத்துலேன்னு. எஞ்சினீயரம்மா ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. அவங்க மட்டுமில்ல. அங்க நான் பார்த்த பல பேரு எப்பவுமே சிரிச்ச முகத்தோட சந்தோஷமா இருந்தாங்க. உலகத்துலேயே சந்தோஷமான மக்கள் அதிகமிருக்கற நாடுன்னு சும்மாவா சொன்னாங்க.
விளையாடிக்கிட்டு இருக்கறப்போ அடிச்ச காத்துல ஃப்ரிஸ்பி ஓரமா இருந்த பெரிய புதர்க்குள்ள விழுந்துடுச்சு. இருட்டா இருந்த புதர்க்குள்ள நுழைஞ்ச நான் தேடிக் கண்டிபுடிச்சேன். எடுக்கலாம்னு வாயில கவ்வும் போது எதிர்பக்கமா யாரோ இழுக்கற மாதிரி இருந்துட்டு. எங்க இனத்துக்கே தோக்கற பழக்கம் கிடையாது. நானும் வலுக்கட்டாயமா இழுக்க ஆரம்பிச்சேன். யாரோ ஒரு டாக் இழுக்குது. வெளியில ஃப்ரிஸ்பியோட அந்த டாக்கையும் இழுத்துட்டு வந்துட்டேன். வந்ததுமே என் வாயிலே இருந்த ஃப்ரிஸ்பிய விட்டுட்டேன். நீங்க நினைக்கறது உண்மை தான். சந்தேகமே இல்லாம அது ஜெஸ்ஸி தான். இமைக்க இமைக்க பாத்துட்டு இருந்தேன். ஜெஸ்ஸியும் ஃப்ரிஸ்பிய போட்டுட்டு என்னைப் பார்த்துட்டு இருந்துச்சு. கொஞ்சம் வெட்கப்பட்ட மாதிரி இருந்துச்சு. இருக்காதா பின்ன என்ன மாதிரி ஒரு ஆண் டாக் காதலனா கிடைக்க எத்தனையோ பெண் டாக் தவம் கிடக்கும் போது. ஜெஸ்ஸி பல் அத்தனையும் முத்து போல வெண்மை. அவளை மாதிரியே. ரெண்டு பேரும் பார்த்துட்டே இருக்கும் போது ,’ஜெஸ்ஸி.. ஜெஸ்ஸி’னு கூப்பிட்டுக்கிட்டே அவ அம்மா வந்தாங்க.
அப்போ தான் அவ பேரு ஜெஸ்ஸின்னு எனக்குத் தெரியும். ஒவ்வொரு தடவை அவ பேர அவங்க சொல்ற போதும் அப்படியே அடி வயித்துல ஜிலீர்னு ஒரு உணர்வு வரும். காதலிச்சுப் பாருங்க. அப்ப புரியும். காதுமடல்லாம் துடிக்க துடிக்க வாலை மிக வேகமா ஆட்டினேன். ஜெஸ்ஸியும் வேகமா ஆட்டினா. என்னை அவளுக்கு ரொம்பபிடிச்சுப் போட்டு.
அதே நேரத்துல என்னை தேடிக்கிட்டு எஞ்சினீயர் வர அவர் கூப்பிட்டதுலேர்ந்து தான் என் பேர் மார்க்னு ஜெஸ்ஸி தெரிஞ்சுக்கிட்டா. இன்னும் வேகமா ஆமோதிக்கற மாதிரி வாலாட்டினா. எஞ்சினீயரும், ஜெஸ்ஸியோட அம்மாவும் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கிட்டாங்க..
“ஹாய் நான் டேனியல்..” “நான் க்ளாரா..!”
அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டே எஞ்சினீயரம்மா இருக்கற இடத்துக்குப் போக நானும் ஜெஸ்ஸியும் பின் தொடர்ந்தோம். எங்க மௌனமே எங்களுக்குள்ள பல உரையாடல்கள நடத்துச்சு. முதல் முறையா என் பக்கத்துல நடந்து வர ஜெஸ்ஸி வெட்கப்பட்டா. அதனால கொஞ்சம் தள்ளித் தள்ளி நடந்தா. பேசலாம்னு பாத்தா…. முகத்தை வேற பக்கம் திருப்பிக்கிட்டா. அப்புறமா சொன்னா.. அன்னிக்கு ரொம்ப வெக்க வெக்கமா இருந்துச்சாம். நானும் விடாம அவ வாலைத் தட்டினேன். அவ கண்டுக்கல.
எஞ்சினீயரம்மாக்கிட்ட போனதும் அவங்க மூணு பேரும் பேச ஆரம்பிக்க என்னையும் ஜெஸ்ஸியையும் தனியே விட்டுட்டாங்க. இதான் சந்தர்ப்பம்னு ஜெஸ்ஸிய பாத்து செல்லமாய் கூப்பிட அவ ஓட ஆரம்பிச்சா. நானும் விடல. துரத்த ஆரம்பிச்சேன். ரெண்டு பேரும் ஓடி ஓடி அந்த பார்க் ஓரத்துல இருந்த ஏரிக்கரைக்கு வந்துட்டோம். ஏரியோரமா காலை நெனச்சுக்கிட்டு ஜெஸ்ஸி நிக்க நானும் பக்கத்துல நின்னேன். சூரியன் அப்போ தான் மறைய ஆரம்பிச்சிருந்தான். அந்த இடமே தகதகன்னு ரம்மியமா இருந்துச்சு. கூடவே என் ஜெஸ்ஸி வேற. கேக்க வேணுமா..? சத்தியமா நான் சொர்க்கத்திலே தான் இருக்கேன்.
மெதுவா பேச ஆரம்பிச்சேன்.
“ஜெஸ்ஸி…”
“ம்ம்..”
“என்கிட்ட பேச மாட்டியா..?”
“அப்படி எல்லாம் இல்லே..”
“பின்ன ஏன் பாத்தும் பாக்காத மாதிரி இருக்க..”
“என்னமோ தெரியல.. வெக்கம் வெக்கமா இருக்கு..”
“என்கிட்ட என்ன வெக்கம்.. உன்னை முத முதலா ஏர்போர்ட்ல பாத்தவுடனே என் மனச பறிகொடுத்துட்டேன்..”
“நானும் தான்.. ஏதோ ஷாக் அடிச்ச மாதிரி இருந்துச்சு. உடனே கிளம்பினவுடனே.. அழுகை அழுகையா வந்துச்சு..”
“நானும் பாத்தேன். என் மேல அவ்ளோ ஆசையா..”
ஆமாம் என்பது போல் தலையாட்டினா..
அப்படியே வானத்துல பறக்கற மாதிரி இருந்துச்சு. நாங்க பேசினது எங்க பாஷையில. உங்க வசதிக்காக மொழிபெயர்த்து கொடுத்தேன். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே அவங்க மூணு பேரும் இருந்த இடத்துக்கு வந்தோம். கிளம்ப வேண்டிய நேரம் வந்தததும் துக்கம் தொண்டையை அடைக்க பிரியாவிடை பெற்றோம்.
வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் ரொம்பவே அசதியா இருந்தாலும் ஜெஸ்ஸிய சந்திச்சு பேசினது ரொம்ப புத்துணர்ச்சியா இருந்துச்சு. சாப்டுட்டு சீக்கிரமே படுக்கப் போயிட்டேன். கனவுல ஜெஸ்ஸி… தேவதை மாதிரி. அவளுக்கும் எனக்கும் ரெக்கை முளைச்சிருக்கு. ரெண்டு பேரும் பறந்துக்கிட்டே உலகத்துல இருக்கற அதிசய இடங்கள்ல்லாம் சுத்திப் பார்க்கிறோம். எப்போ தூங்கினேன்னு தெரியல.
அடுத்த நாள் காலையில் ஒரு ஆச்சர்யம் காத்துட்டு இருந்தது.